வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்களை தொடர்ந்து நடத்த வலியுறுத்தல்

சிறப்பு திருத்த முகாம்களை டிசம்பர் மாதத்திலும் தொடர்ந்து நடத்த வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது

Update: 2021-11-28 12:15 GMT

வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாமை பார்வையிட்டு மனு அளித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் பாரதி

கும்பகோணம் நகரில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்துதல் குறித்த சிறப்பு சுருக்கமுறை திருத்த பணிகளை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் பாரதி, நகரச் செயலாளர் மதியழகன், மாவட்டக்குழு உறுப்பினர் சுந்தர்ராஜன், நகர குழு உறுப்பினர் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பார்வையிட்டனர்.

பின்னர் மாவட்ட செயலாளர் பாரதி செய்தியாளர்களிடம் கூறியது: வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்துதல் குறித்த சிறப்பு சுருக்கமுறை திருத்த பணிகளுக்காக இந்த மாதத்தில் நடைபெற மூன்று சிறப்பு முகாம்களை மழை மற்றும் வெள்ள பாதிப்பு காரணமாக பொதுமக்கள் முழுவதும் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. ஆகவே சிறப்பு முகாம்களை வரும் டிசம்பர் மாதத்தில் தொடர்ந்து நடத்த வேண்டும்.

இறப்பு சான்று கோரும் விண்ணப்பங்கள் மற்றும் அரசு வழங்கும் இறப்பு சான்றுகள் ஆதாரமாக கொண்டு இறந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும். குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒரே வாக்கு சாவடியில் வாக்களிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். வாக்குசாவடி அமைவிடம் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் கலந்து ஆலோசனை செய்ய வேண்டும்.

கல்லூரிகளுக்கு நேரில் சென்று 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்களை அடையாளம் கண்டு விண்ணப்பம் பெற்று வாக்காளர் பட்டியலில் இணைத்து வாக்காளர் அடையாள அட்டை வழங்க வேண்டும். வாக்காளர்கள் இடமாற்றம் அதிகமாக உள்ள நிலையில், புதிதாக இடமாற்றம் செய்யும் இடத்தில் வாக்காளர் அடையாள அட்டை வழங்க வேண்டும். இறுதி வாக்காளர் பட்டியல் துல்லியமாக வெளியிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

Tags:    

Similar News