கும்பகோணத்தில் ஓடும் ஆட்டோவுக்கு மதுரையில் அபராதம் விதிக்கப்பட்ட விநோதம்

மதுரை ஒத்தக்கடை போக்குவரத்து போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தன்மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்துசெய்ய வேண்டும்

Update: 2021-10-07 15:45 GMT

மதுரையில் உள்ள போக்குவரத்து போலீஸாரால் ஹெல்போடவில்லை என அபராதம் விதிக்கப்பட்ட கும்பகோணத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்.

கும்பகோணத்தில் ஓடும் ஆட்டோவிற்கு, ஹெல்மெட் போடவில்லை என மதுரையில் அபராதம் விதித்த போக்குவரத்து காவல்துறையின் அநியாய எல்லை மீறல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஒரு திரைப்படத்தில், "வானத்தில் செல்லும் விமானத்திற்காக, சாலையில் போக்குவரத்தை காவல்துறையினர் நிறுத்தி வைத்திருப்பார்கள், இதை கண்ட விவேக் உங்கள் கடமை உணர்ச்சி அளவே இல்லையா ஆபிசர்" என்று கிண்டலடித்திருப்பார். அதுபோல மதுரையிலுள்ள போக்குவரத்து காவல்துறையினர் தங்களது கடமை உணர்ச்சியால் எல்லை மீறி, தஞ்சாவூர் மாவட்டம்,  கும்பகோணத்தில் ஓடும் ஆட்டோவிற்கு, ஹெல்மெட் போடவில்லை என  அபராதம் விதித்துள்ளனர்.  மேலும், ஆன்லைன்  மூலம் அபராதம் விதிக்கும்  திட்டத்தையே கேலிக்கூத்தாக்கியுள்ளனர்.

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மேட்டு தெருவில் வசித்து வருபவர் குருநாதன். இவர் ஒரு ஆட்டோ தொழிலாளியான  இவர் கடந்த 20 வருடங்களாக ஆட்டோ தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு சொந்தமாக TN68 L1374 என்ற ஆட்டோ உள்ளது. கடந்த ஏழு வருடமாக முறையாக சாலை பர்மிட், எப்சி, வாகன காப்பீடு ஆகியவற்றை முறையாக பராமரித்து வருகிறார். இந்நிலையில், அக்டோபர் 5ஆம் தேதி இரவு சுமார் 7 மணிக்கு வழக்கம் போல் சவாரி செல்வதற்காக கும்பகோணம் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பும் பொழுது, அவரது செல்லுக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில், மதுரை ஒத்தக்கடை பகுதியில் சென்றதாகவும், வாகனத்திற்கு முறையான ஆவணங்கள் இல்லை என்றும், மேலும் ஹெல்மெட் போடவில்லை என்றும் ரூ. 200 அபராதம் விதித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.  இதனால் அவர் அதிர்ச்சியடைந்தார்..

கும்பகோணத்தில் இருக்கும் பொழுது மதுரையில் இருந்து  ஆட்டோவில் ஓட்டும் போது ஹெல்மெட் போடாமல் சென்றதற்காகவும், ஆட்டோவிற்கு சரியான ஆவணங்கள் இல்லை எனவும் கூறி அபராதம் விதித்திருப்பது வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கிறது என்றார். மேலும் அவர் கூறுகையில், இது முற்றிலும் பொய் வழக்காகும். இது காவல்துறையின் மீது மக்கள்  வைத்திருக்கும் நம்பிக்கையை பொய்யாக்கும் செயலாக  இருக்கிறது.

ஏற்கெனவே கொரோனா ஊரடங்கு உத்தரவாலும், பெட்ரோல் டீசல் கடுமையான விலை உயர்வாலும்  தொழில் செய்ய முடியாமல் ஆட்டோ தொழிலாளிகள் அன்றாட வருமானம் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இச்சூழ்நிலையில் இதுபோன்று பொய் வழக்குகள் போடுவது கண்டிக்கத்தக்கது. இது தொடர்பாக புகார் அளிக்க உள்ளதாகவும், இதனை கையாண்ட மதுரை ஒத்தக்கடை போக்குவரத்து காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தன் மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார் குருநாதன்.


Tags:    

Similar News