500 ஆண்டுகள் பழமையான பச்சைக்கல் லிங்கம் சிலை மீட்பு: 2 பேர் கைது

500 ஆண்டுகள் பழமையான பச்சைக்கல் லிங்கம் சிலை மீட்கப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-05-17 12:45 GMT

கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்ட பச்சைக்கல்லிங்கம் சிலை.

சென்னை பூந்தமல்லி அருகே தொன்மையான உலோக நாகாபரணத்துடன் கூடிய பச்சைகல் லிங்கம் ஒன்று பதுக்கி வைக்கப்பட்டு கடத்தப்பட உள்ளது என்ற இரகசிய தகவல் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிடைத்தது.

இதனை தொடர்ந்து சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல்துறை இயக்குநர் ஜெயந்த் முரளி உத்தரவுப்படி, சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல்துறை தலைவர் தினகரன் வழிகாட்டுதலின்படி, சிலை திருட்டு தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையில் காவல் துணை கண்காணிப்பாளர் கதிரவன், காவல் உதவி ஆய்வாளர்கள் ராஜசேகரன், செல்வராஜ் மற்றும் காவலர்கள் பிரபாகரன், பாண்டிய ராஜ், சுந்தர் ஆகியோர் அடங்கிய சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் சிலைகளை வாங்கும் வியாபாரிகள் போல் தங்களை காட்டிக்கொண்டு சிலை கடத்தல்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது  இச்சிலைக்கு விலை ரூ. 25 கோடி சொல்லப்பட்டுள்ளது.


இந்நிலையில் சிலை கடத்தல் காரர்களை நம்பவைத்து அவர்கள் சிலையை காண்பித்தவுடன் அதனை  சென்னை வெள்ளவேடு, புதுகாலனியை சேர்ந்த எத்திராஜ் மகன் பக்தவச்சலம் (எ) பாலா, (வயது 46,)  சென்னை புதுசத்திரம், கூடப்பாக்கம் கலெக்டர் நகரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் பாக்கியராஜிடம் (வயது 42 ) சிலையை பறிமுதல் செய்து காவல் உதவி ஆய்வாளர் ராஜசேகர் தனி அறிக்கையுடன் மேற்கண்ட நபர்களை சென்னை சிலை திருட்டு தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஒப்படைத்தார்.

மேற்படி சிலையானது பச்சைகல் லிங்கத்தினை உலோகத்தால் ஆகிய நாகாபரணம் தாங்கி அதன் பின்புறம் பறக்கும் நிலையில் கருடாழ்வருடன் சுமார் 29 செ.மீ உயரம் 18 செ.மீ அகலம் பீடத்தின் அடிபாக சுற்றளவு சுமார் 28 செ.மீ எடை சுமார் 9 கிலோ 800 கிராம் எடையும் பச்சை கலர் லிங்கம் உயரம் சுமார் 7 செ.மீ அதன் சுற்றளவு 18 செ.மீ ஆக உள்ளது.

மேற்படி சிலையானது 500 ஆண்டுகள் தொன்மையானது எனவும் லிங்கத்தின் கீழே சிவபெருமானின் ஐந்து முகங்கள் ஆயுதங்களுடன் பொறிக்கப்பட்டுள்ளது எனவும் சொல்லபடுகிறது. மேலும் படம் எடுத்த நாகத்தின் பின்புறம் கருடாழ்வார் கைகளை தூக்கிய வண்ணம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த அம்சங்கள் யாவும் நேபாள பாணியில் ஆனது என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News