கும்பகோணம் கோட்டத்தில் 1335 பேருந்துகள் நிறுத்தம்

Update: 2021-05-10 07:15 GMT

முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பேருந்துகள். ஒரு சில கடைகள் மட்டுமே திறந்து இருந்ததால் மாவட்டம் முழுவதும் பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

தென்னிந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்துக்கழக மண்டலமாக கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகம் செயல்பட்டு வருகிறது. திருச்சி, கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, நாகப்பட்டினம், கும்பகோணம் ஆகிய 6 மண்டலங்களை உள்ளடக்கிய இந்த கும்பகோணம் போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து தினமும் 1335 பேருந்துகள் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கொரோனா பரவல் 2-ம் அலை அதிகரிக்க தொடங்கியுள்ளதால் தமிழக அரசு சார்பில் 24ஆம் தேதிவரை முழு ஊரடங்கு அமல்ப்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளதால் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, கும்பகோணம் உள்ளிட்ட பேருந்து நிலையங்கள் பேருந்துகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் அனைத்து பேருந்துகளும் கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மளிகை கடைகள் மற்றும் இறைச்சிக் கடைகளுக்கு மட்டும் மதியம் 12 மணி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருந்தும் மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் திறக்கப்படாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. குறிப்பாக வணிக நிறுவனங்கள் அதிகம் உள்ள பெரிய கடைத்தெரு, நால்ரோடு, பாலக்கரை, உச்சிபிள்ளையார் கோவில் உள்ளிட்ட பகுதிகள் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது.

Tags:    

Similar News