இராமநாதபுரம்: கணிக்கர் சமூக மாணவர்களுக்கு பழங்குடியினர் சான்று வழங்கல்
இராமநாதபுரத்தில், கணிக்கர் சமூக மாணவர்களுக்கு பழங்குடியினர் சான்றை, வருவாய் கோட்டாட்சியர் வழங்கினார்.;
இராமநாதபுரத்தில், வருவாய் கோட்டாட்சியரிடம் இருந்து பழங்குடியினர் சான்றை பெற்றுக் கொண்ட கணிக்கர் சமூக குழந்தைகள்.
இராமநாதபுரம் அருகே, சக்கரக்கோட்டை சிவஞானபுரம் வ.உ.சி.நகரில், 30 குடும்பங்களைச் சேர்ந்த கணிக்கர் வசித்து வருகின்றனர். இவர்கள், தங்களுக்கு பழங்குடியினர் ஜாதிச்சான்று கோரி, 1997 ஆம் ஆண்டு முதல், அவ்வப்போது மனு அளித்து வந்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கடந்த ஒரு மாதத்திற்கு முன் உரிய விசாரணை செய்தனர்.
அதை தொடர்ந்து, கணிக்கர் சமூகத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு பழங்குடியினர் ஜாதிச்சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவ்வகையில், கணிக்கர் சமூக குழந்தைகள் 45 பேருக்கு, இராமநாதபுரம் கோட்டாட்சியர் ஷேக் மன்சூர் சான்றிதழ் வழங்கினார்.
இந்த நிகழ்வில், வருவாய் ஆய்வாளர் கணபதி, வி.ஏ.ஓ கண்ணன், கணிக்கர் சங்கத்தலைவர் வீரக்குமார், செயலாளர் ராஜா, பொருளாளர் நடராஜன், ஆலோசகர் அடைக்கலம், ஜோதிடர் ஹரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.