ஊட்டி மலர்க் கண்காட்சி: இறுதி கட்டப் பணிகள் தீவிரம்

வருகிற 19-ம் தேதி மலர் கண்காட்சியை முன்னிட்டு, ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இறுதி கட்டப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது

Update: 2023-05-10 06:14 GMT

ஊட்டி மலர்க்கண்காட்சி - கோப்புப்படம்

மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும், சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும் தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். நூற்றாண்டு பழமை வாய்ந்த ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் மே மாதம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது.

கடந்த ஆண்டு கோடை சீசனான ஏப்ரல், மே மாதங்களில் தாவரவியல் பூங்காவிற்கு 7.5 லட்சம் பேர் வந்தனர். கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பின்னர் கோடை சீசன் நடந்தது.

இதையடுத்து 2-வது சீசன் மற்றும் தீபாவளி, கிறிஸ்துமஸ் பண்டிகை என தொடர் விடுமுறை நாட்களில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தனர். இதன் மூலம் கடந்த ஒரு ஆண்டில் ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு 24 லட்சத்து 12 ஆயிரத்து 483 சுற்றுலா பயணிகள் வருகை தந்து உள்ளனர்.

இந்த நிலையில் வருகிற 19-ம் தேதி மலர்கண்காட்சி  தொடங்க உள்ளது. இதை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதையொட்டி மலர் நாற்றுகள் நடுதல் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக பூங்கா நுழைவு வாயில் பகுதி கதவுகள் பூங்காவில் உள்ள மரச் சாமான்கள், முக்கியமான பொருள்கள் ஆகியவற்றுக்கு வர்ணம் தீட்டும் பணிகள் நடக்கிறது. இதேபோல் மலர்கண்காட்சிக்காக புல் மைதானத்தில் மேடை அமைக்கும் பணிகள் தற்போது தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது. ஒரு வாரத்திற்குள் இந்த பணிகளை முடிக்க முடிவு செய்து இருப்பதாக பூங்கா நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

இதேபோல் ரோஜா பூங்காவில் வருகிற 13-ம் தேதி ரோஜா கண்காட்சி தொடங்க உள்ளது. அங்கும் கூடாரம் அமைத்தல், மேடை அமைத்தல் அழகுபடுத்துதல், வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

Tags:    

Similar News