எலச்சிபாளையம் அருகே மகள் காதலனுடன் சென்றதால் விரக்தி: தாய் தற்கொலை

எலச்சிபாளையம் அருகே மகள் காதலனுடன் சென்றதால் ஏற்பட்ட விரக்தியில், தாய் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-01-26 00:00 GMT

பார்வதி

எடப்பாடி அருகே உள்ள வீரப்பம்பாளையத்தை சேர்ந்தவர் குமார் (45). இவர் எலச்சிபாளையம் ஒன்றியம் நெய்க்காரம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்குவாரியில், குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி பார்வதி (40). இவர்களுக்கு கலை பிரியா (19) என்ற மகளும், சந்தோஷ் (17) என்ற மகனும் உள்ளனர்.

கல்குவாரிக்கு வரும் டிரைவர் ஒருவருடன், பார்வதியின் மகள் கலை பிரியாவுக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. தகவல் அறிந்த குமார் மற்றும் பார்வதி ஆகியோர்,  மகளிடம் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டிரைவரை காதலிக்க வேண்டாம் என்று வற்புறுத்தியுள்ளனர். பெற்றோரின் பேச்சை கேட்காமல், கலைபிரியா தொடர்ந்து காதலித்து வந்துள்ளார். மேலும் அவரை திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில்,  கடந்த 23-ந் தேதி கலைபிரியா திடீரென காணாமல் போய்விட்டார். பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. மகள் காதலனுடன் சென்றிருப்பார் என்று நினைத்த பார்வதி,  மனமுடைந்து.  கல்குவாரியில் உள்ள 50 அடி ஆழ குட்டையில், தண்ணீரில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் கிடைத்ததும், எலச்சிபாளையம் போலீசார், சடலத்தை மீட்டனர். இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News