விளையாட்டு வினையானது: நண்பரை கத்தியால் குத்தி கொலை செய்தவர் கைது

திருச்செங்கோடு அருகே விளையாடும்போது ஏற்பட்ட தகராறில், நண்பரை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-01-20 07:30 GMT

பைல் படம்

திருச்செங்கோடு அருகே பருத்திப்பள்ளி நாடார் தெருவை சேர்ந்தவர் உமாசங்கர் (27). லாரி பட்டறை தொழிலாளி. இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சிவாம்பிகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதே பகுதியை சேர்ந்தவர் கோபி (23) என்பவர் டயர்களுக்கு பஞ்சர் ஒட்டும் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். உமாசங்கரும், கோபியும் நண்பர்கள்.

இந்த நிலையில் நண்பர்கள் 2 பேரின் குடும்பத்தினர் அந்த பகுதியில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்துக் கொண்டிருந்தனர். அப்போது உமாசங்கர், கோபி ஆகிய 2 பேரும் கோவில் முன்பு நின்று பேசி கொண்டிருந்தனர். மேலும் அவர்கள் குடிபோதையில் ஒருவரை ஒருவர் துரத்திப் பிடித்து விளையாடியதாக தெரிகிறது.

இவ்வாறு விளையாடி கொண்டிருந்தபோது உமாசங்கருக்கும், கோபிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த கோபி, நண்பர் என்றும் பாராமல் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் உமாசங்கரை சரமாரியாக குத்தினார். இதில் நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உமாசங்கர் உயிரிழந்தார்.

இது குறித்து, உமாசங்கரின் மனைவி கொடுத்து புகாரின் பேரில், எலச்சிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நண்பரை கத்தியால் குத்திக் கொன்றதாக கோபியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News