கொல்லிமலை அரப்பளி காப்பித்தூள் தொழிற்கூடத்தை நாமக்கல் கலெக்டர் ஆய்வு

கொல்லிமலையில் விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பில் செயல்படும் அரப்பளி காப்பித்தூள் தொழிற்கூடத்தை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2021-08-01 03:00 GMT

கொல்லிமலையில் விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பில் செயல்படும் அரப்பளி காப்பித்தூள் தொழிற்கூடத்தை  ஆய்வு செய்யும் நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை தாலுக்கா, அரியூர் நாடு பஞ்சாயத்து, தெம்பளம் கிராமத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்ககத்தின் கீழ் செயல்பட்டு வரும், கொல்லிமலை அரப்பளி காப்பி மற்றும் மிளகு உற்பத்தியாளர் தொழிற்கூட்டமைப்பின் சார்பில் செயல்படும் காப்பித்தூள் உற்பத்தி மற்றும் விற்பனை நிலையத்தை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கொல்லிமலையை சேர்ந்த 28 தொழில் குழுக்களை ஒருங்கிணைந்த அரப்பளி காபி மற்றும் மிளகு உற்பத்தியாளர் கூட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. கொல்லிமலை மக்கள் தாங்கள் உற்பத்தி செய்த காப்பி மற்றும் மிளகினை, இந்த கூட்டமைப்பில் வழங்கி வருகின்றனர். அங்கு விவசாயிகளிடமிருந்து வாங்கப்பட்ட காப்பி கொட்டைகளை அரைத்து, சிக்கரியுடன் சேர்த்து சுத்தமான முறையில் காப்பித்தூள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

அதை மாநில அளவிலான கண்காட்சி மூலமாகவும், கொல்லிமலைக்கு பல்வேறு மாநிலங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போன்று, சர்வதேச அளவில் தரம் வாய்ந்ததாக கருதப்படும் மிளகும் இந்த கூட்டமைப்பின் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த தொழிற்கூடத்தை பார்வையிட்ட கலெக்டர், இத்தொழிலை விரிவுபடுத்தி, விவசாயிகள் கூடுதல் லாபம் ஈட்டும் வகையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தினார்.

ஆய்வில், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்ககத்தின் திட்ட இயக்குநர் பிரியா, பிஆர்ஓ சீனிவாசன், கொல்லிமலை தாசில்தார் கிருஷ்ணன், பிடிஓ.,க்கள் நடராஜன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News