சேந்தமங்கலம் அருகே டூ வீலர்கள் மோதல் ஒருவர் பலி: 2 பேர் படுகாயம்

சேந்தமங்கலம் அருகே டூ வீலர்கள் நேருக்நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 2 பேர் படுகாயமடைந்தனர்.

Update: 2021-08-26 03:00 GMT

பைல் படம்

திருச்சி மாவட்டம் வேலம்பட்டி பகுதியை சேர்ந்தவர், ராஜேந்திரன் (56), தொழிலாளி. இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் பைக்கில் நாமக்கல் சென்று விட்டு, மீண்டும் வேலம்பட்டிக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.

அவர் எருமப்பட்டி அருகே, பவித்திரம் ஏரிக்கரையில் சென்று கொண்டிருந்தபோது, ஏரிக்கரையின் ஓரத்தில் உள்ள மண் ரோட்டில் காளிபட்டியை சேர்ந்த வினோத்குமார் (20) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் மற்றொரு மோட்டார்சைக்கிளில் அவ்வழியாக வந்து கொண்டிருந்தனர்.

ஏரிக்கரை அருகே இரண்டு டூ வீலர்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் ராஜேந்திரன் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

வினோத்குமார் மற்றும் 17 வயது சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News