எருமப்பட்டி அருகே 2வது மாடியிலிருந்து தவறி விழுந்த கட்டிட மேஸ்திரி சாவு

எருமப்பட்டி அருகே 2வது மாடியில் இருந்து தவறி விழுந்த கட்டிட மேஸ்திரி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2021-09-04 12:15 GMT

பைல் படம்.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே உள்ள கோடங்கிப்பட்டி பஞ்சாயத்து, தோட்டக்காட்டை சேர்ந்தவர் பெரியசாமி ( 60). கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி லட்சுமி. இந்த தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

சம்பவத்தன்று, பெரியசாமி எருமப்பட்டி அருகே பாலப்பட்டி செல்லும் ரோட்டில் ஆறுமுகம் என்பவரின் வீட்டின் கட்டுமானப் பணியை மேற்கொண்டு வந்தார். அப்போது 2-வது மாடியில் வேலை செய்துகொண்டிருந்த அவர் திடீரென தவறி கீழே விழுந்தார்.

இதனால் பலத்தகாயமடைந்த அவரை மீட்டு, அங்கு வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பெரியசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த எருமப்பட்டி போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News