ராசிபுரம் அருகே 2 வயது குழந்தை மீது ஏறிய கார்: வைரலாகும் சிசிடிவி காட்சிகள்
ராசிபுரம் அருகே 2 வயது குழந்தை மீது ஏறி இறங்கிய கார் குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வளைதளங்கில் வைரலாகி வருகிறது.;
இராசிபுரம் அருகே 2 வயது குழந்தை மீது கார் ஏறிய சம்பவம், சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் நடுத்தெருவை சேர்ந்தவர் கண்ணன். சலவைத் தொழிலாளி. இவரது 2 வயது மகன் தருண் நேற்று வீட்டின் அருகே தருண் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அவ்வழியாக வந்த காரை நோக்கி குழந்தை ஓடி உள்ளான். அதை கவனிக்காத காரின் டிரைவர், திருப்புவதற்காக காரை பின்நோக்கி ஓட்டியுள்ளார். அப்போது குழந்தை தருண் மீது கார் மோதியது.
இதனால், கீழே விழுந்த தருண் மீது காரின் சக்கரம் ஏறி இறங்கியது. பின்னர் காரை டிரைவர் முன்னோக்கி இயக்கியபோது, மீண்டும் 2-வது முறையாக காரின் பின்புற சக்கரங்கள் குழந்தை தருண் மீது ஏறியது. இதில் குழந்தை படுகாயம் அடைந்தான்.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கூச்சலிட்டனர். உடனே டிரைவர் காரை நிறுத்தினார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் குழந்தையை மீட்டு ராசிபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் மீது கார் ஏறி இறங்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து ராசிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.