ஜேடர்பாளையம் அருகே மின்சாரம் தாக்கி கரும்பு வெட்டும் தொழிலாளி உயிரிழப்பு

ஜேடர்பாளையம் அருகே கரும்பு வெட்டும் தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். மற்றொரு பெண் படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதி.

Update: 2021-08-25 02:00 GMT

மாதிரி படம் 

நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையம் அருகே உள்ள பிலிக்கல்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவர் அப்பகுதியில் கரும்பு ஆலை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்தவர்கள் கரும்பு வெட்டும் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் ஆலை வளாகத்தில் தங்கி உள்ளனர்.

சம்பவத்தன்று இரவு, திட்டக்குடியை சேர்ந்த மாயவேல் ( 57) என்ற தொழிலாளி தங்கியிருந்த கொட்டகையில், லைட்டின் சுவிட்சை போட்டார். அப்போது எதிர்பாராத வகையில் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். அங்கிருந்த மற்ற தொழிலாளர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனிடையே திட்டக்குடியை சேர்ந்த வெங்கடேசன் என்பவருடைய மனைவி மாதேஸ்வரியும் (34) அதே சுவிட்சை போட்டுள்ளார், அப்போது அவரையும் மின்சாரம் தாக்கியது. படுகாயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News