பரமத்தி வேலூர் அருகே 7வது திருமணத்திற்கு முயன்ற பெண் உட்பட 4 பேர் கைது

Crime News in Tamil -பரமத்தி வேலூர் அருகே 7வது திருமணத்திற்கு முயன்ற பெண் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-09-23 03:00 GMT

பரமத்தி வேலூர் அருகே திருமண மோசடி கும்பலை போலீசார் கைது செய்தனர்.

Crime News in Tamil -நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே கள்ளிபாளையத்தை சேர்ந்தவர் தனபால் (35), இவருக்கும் மதுரையைச் சேர்ந்த சந்தியா (26) என்பவருக்கும், கடந்த 7ஆம் தேதி, ப.வேலூர் அருகில் உள்ள புது வெங்கரை அம்மன் கோவிலில் உறவினர்கள் சூழ திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் பெண் வீட்டாரராக பெண்ணுடைய அக்கா, மாமா மற்றும் மதுரையைச் சேர்ந்த பாலமுருகன் (45) என்ற கல்யாண புரோக்கர் ஆகிய 3 பேர் மட்டுமே வந்திருந்தனர். திருமணம் நடைபெற்று முடிந்தவுடன் திருமணத்திறகான கமிஷனாக ரூ. 1.5 லட்சம் வாங்கிக் கொண்டு மூவரும் சென்று விட்டனர். புது மணத் தம்பதிகள் தங்களது வாழ்க்கை பயணத்தை தொடங்கினர்.

இந்த நிலையில், 2 நாட்கள் கழித்து, 9ம் தேதி அதிகாலை புது மணப்பெண் சந்தியாவை திடீரென்று காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த தனபால் தனது மனைவியை தேடிப்பார்த்தார். எங்கும் கிடைக்கவில்லை. செல்போனில் தொடர்பு கொண்டபோது, சந்தியா, கல்யாண புரோக்கர் பாலமுருகன் மற்றும் அவரது உறவினர்களாக வந்த அனைவரது செல்போன் நம்பர்களும் சுவிட்ச் ஆப் என வந்துள்ளது. வீட்டில் இருந்த பீரோவில் பார்த்தபோது கல்யாண பட்டு புடவை, நகை, மணப்பெண் கொண்டு வந்த துணிமணிகள் அனைத்தும் காணவில்லை என்பது தெரியவந்தது. திருமணம் செய்வதாக கூறி அவர்கள் மோசடியில் ஈடுபட்டதை தெரிந்துகொண்ட தனபால் இது குறித்து ப.வேலூர் போலீசில் புகார் செய்தார்.

இந்தநிலையில், அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு நபருக்கு திருமணம் செய்து கொடுக்க மணமகளை தேடிய போது வேறு ஒரு புரோக்கர் மூலம் சந்தியாவின் போட்டோ வந்துள்ளது. உடனடியாக உஷாரான தனபால் குடும்பத்தினர், திருமணம் செய்து கொள்ள விரும்புவது போல் மதுரையைச் சேர்ந்த தனலட்சுமி (45) என்ற புரோக்கரிடம் பேசி உள்ளனர். மணமகனின் போட்டோ புரோக்கரிடம் கொடுத்துள்ளனர் அதற்கு மணமகளுக்கு மாப்பிள்ளையை பிடித்து உள்ளது என பேசி போன் மூலமே முடிவு செய்துள்ளனர். நேற்று காலை திருச்செங்கோட்டில் திருமணம் செய்வதாக முடிவு செய்து அதிகாலை 6 மணிக்கு சந்தியா, புரோக்கர் தனலட்சுமி உறவினர் ஐயப்பன் ஆகியோர் ஒரு காரில் திருச்செங்கோடு வந்துள்ளனர். அப்போது அங்கு வந்த சந்தியா வசமாக சிக்கிக்கொண்டார். தொடர்ந்து மூவரையும் வளைத்துப்பிடித்த தனபால் உறவினர்கள் அவர்களை பரமத்தி வேலூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் மதுரையை சேர்ந்த இந்த மோசடி கும்பல், இதுவரை சந்தியாவுக்கு 6 முறை திருமணம் நடத்தி வைத்து பணம் மற்றும் நகைகளை மோசடி செய்ததுள்ளதும், தற்போது 7 ஆவதாக நடக்க இருந்த திருமணத்தின் போது சிக்கிக் கொண்டதும் தெரியவந்தது. ஒவ்வொரு திருமணத்தின் போதும் லட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு இரண்டு நாள் மாப்பிள்ளையிடம் நெருங்கிப் பழகிவிட்டு, பணம் மற்றும் நகையுடன் எஸ்கேப் ஆகிவிடுவது வழக்கம். திருமணமாகாத ஆண்களை குறி வைத்து, மதுரையைச் சேர்ந்த கல்யாண புரோக்கர்கள் மூலம் இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News