பரமத்திவேலூர் அருகே அரசு பள்ளி வளாகத்தில் முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

பரமத்திவேலூர் அருகே அரசு பள்ளி வளாகத்தில் குழி தோண்டியபோது முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது.

Update: 2021-09-10 09:00 GMT

நாமக்கல் மாவட்டம் கொந்தளம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியை அதிகாரிகள் பார்வையிட்டனர்.

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே கொந்தளம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளி வளாகத்தில் ஏராளமான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இந்நிலையில் காய்ந்து போன மரக்கன்றுக்கு பதிலாக புதிய மரக்கன்றுகள் நடுவதற்காக தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்ட தொழிலாளர்கள் மூலம் பள்ளி வளாகத்தில் குழிகள் தோண்டப்பட்டு வருகின்றன. அப்போது தோண்டப்பட்ட இடத்தில் பெரிய அளவிலான பானை ஒன்று இருந்ததை தொழிலாளர்கள் பார்த்தனர். மேலும் அந்த பானைக்குள் மண்ணுடன் எலும்புக்கூடுகள் மக்கிய நிலையில் இருந்ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரசேகரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவரது தகவல் பேரில், பரமத்திவேலூர் தாசில்தார் அப்பன்ராஜ், கபிலர்மலை வட்டார கல்வி அலுவலர் குணசேகரன், கொந்தளம் பஞ்சாயத்து தலைவர் மணிமேகலை ஆகியோர் அங்கு வந்தனர். அப்போது அங்கு கிடைத்தது முதுமக்கள் தாழி என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர். இதையடுத்து குழிக்குள் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியை மீட்டு பத்திரமாக கொந்தளம் விஏஓ அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர். சேலம் தொல்பொருள் துறையினர் முதுமக்கள் தாழியை ஆய்வு செய்த பின்னரே அது எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு வைக்கப்பட்டது என்பது தெரியவரும் என்று அதிகாரிகள் கூறினர். மேலும் இந்த முதுமக்கள் தாழியை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர்.

Tags:    

Similar News