பரமத்திவேலூர் ஏல மார்க்கெட்டில் கொப்பரைத் தேங்காய் விலை உயர்வு
பரமத்திவேலூர் ஏல மார்க்கெட்டில் கொப்பரைத் தேங்காய் விலை உயர்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.;
பரமத்தி வேலூர் பகுதியில், ஏராளமான விவசாயிகள் தென்னை வளர்த்து வருகின்றனர். அவர்கள் தங்கள் மரங்களில் கிடைக்கும் தேங்காய்களை உடைத்து, அதை உலர்த்தி கொப்பரையாக மாற்றி, பரமத்தி வேலூர், வெங்கமேட்டில் செயல்படும் தேசிய எலக்ட்ரானிக் ஏல மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
மறைமுக ஏல விற்பனையில் தரத்திற்கேற்ப விலை கிடைக்கிறது. கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில், 3 ஆயிரத்து 834 கிலோ கொப்பரை தேங்காய்கள் கொண்டு வரப்பட்டன. அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.109.80-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 84.19-க்கும், சராசரியாக ரூ. 93.10-க்கும் விற்பனையானது.
இந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு, 11 ஆயிரத்து 265 கிலோ கொப்பரை தேங்காய் வரத்து இருந்தது. ஏலத்தில், அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.103-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 85.99-க்கும், சராசரியாக ரூ. 96.49-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.10 லட்சத்து 8 ஆயிரத்து 14 மதிப்பீட்டில் விற்பனை நடைபெற்றது. கொப்பரை தேங்காய் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.