பரமத்திவேலூரில் நடைபெற்ற ஏல சந்தை நிலவரம்
பரமத்திவேலூரில் பூக்கள் மற்றும் தேங்காய் ஏலம் நடைபெற்றது. பூக்கள் விலை வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகள் கவலை;
காட்சி படம்
பூக்கள் விலை சரிவு: விவசாயிகள் கவலை
பரமத்திவேலூர் பூக்கள் ஏல சந்தையில் பூக்கள் விலை சரிவடைந்துள்ளதால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனர்.
வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி ரூ.3,000-க்கும், சம்பங்கி கிலோ ரூ.150-க்கும், அரளி கிலோ ரூ.300-க்கும், ரோஜா கிலோ ரூ.150-க்கும், முல்லைப் பூ ரூ.1800-க்கும், செவ்வந்திப்பூ ரூ.100-க்கும், கனகாம்பரம் ரூ.1,000-க்கும், காக்காட்டான் ரூ.1,200-க்கும் ஏலம் போனது.
நேற்று நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.2,000-க்கும், சம்பங்கி கிலோ ரூ120-க்கும், அரளி கிலோ ரூ.250-க்கும், ரோஜா கிலோ ரூ.200-முல்லைப் பூ கிலோ ரூ.1,600-க்கும், செவ்வந்திப்பூ ரூ.120-க்கும், கனகாம்பரம் ரூ.1,200-க்கும், காக்காட்டான் ரூ.800-க்கும் ஏலம் போனது.
முகூர்த்தம் மற்றும் விசேஷ நிகழ்வுகள் எதுவும் இல்லாததால் பூக்கள் விலை சரிவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
பரமத்தி வேலூர் தேங்காய் ஏலம்
பரமத்திவேலூர் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் ரூ.44 ஆயிரத்திற்கு தேங்காய் ஏலம் போனது. கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 865 கிலோ தேங்காய்களை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.28.10-க்கும், குறைந்தபட்சமாக ரூ.22.99-க்கும், சராசரியாக ரூ.26-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.21 ஆயிரத்து 757-க்கு விற்பனையானது.
நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 1,676 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.28.10-க்கும், குறைந்தபட்சமாக ரூ.12.19-க்கும், சராசரியாக ரூ.25.79-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.44 ஆயிரத்து 140-க்கு விற்பனையானது.