ஏடிஎம் கொள்ளையர் தாக்கியதால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் போலீசாருக்கு ஐ.ஜி ஆறுதல்..!

குமாரபாளையம் அருகே, ஏடிஎம் கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்து, நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் போலீஸ் அதிகாரிகளை, மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமார் மற்றும் சேலம் சரக டிஐஜி உமா ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.

Update: 2024-09-29 10:00 GMT

ஏடிஎம் கொள்ளையர்கள் தாக்கியதால், காயமடைந்து, நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும், போலீஸ் அதிகாரிகளை, கோவை மேற்கு மண்டல ஐஜி செல்வகுமார் நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார். அருகில் சேலம் சரக டிஐஜி உமா, நாமக்கல் எம்.பி. ராஜேஷ்கண்ணன் ஆகியோர்.

ஏடிஎம் கொள்ளையர் தாக்கியதால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் போலீசாருக்கு ஐ.ஜி ஆறுதல்

நாமக்கல்:

குமாரபாளையம் அருகே, ஏடிஎம் கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்து, நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் போலீஸ் அதிகாரிகளை, மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமார் மற்றும் சேலம் சரக டிஐஜி உமா ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள். காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் அக்.1ம் தேதி நாமக்கல் வருகிறார்.

கேரள மாநிலம் திருச்சூரில் கடந்த, 27ம் தேதி, ஏடிஎம்களில் கொள்ளையடித்துவிட்டு, கன்டெய்னர் லாரியில் தப்பிய, ஹரியானாவைச் சேர்ந்த கொள்ளைக்கும்பலை, நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அப்போது கொள்ளையர்கள் போலீசாரைத் தாக்கினார்கள்.

அப்போது, குமாரபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ. ரஞ்சித் ஆகியோர் காயமடைந்தனர். பின்னர் தற்காப்புக்காக கொள்ளையர்களை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். அப்போது, கொள்ளையன் ஜூமாந்தின் (37), என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். குண்டுகாயத்துடன், ஹஸ்ரு (எ) அஜர்அலியை (28), போலீசார் பிடித்து கைது செய்தனர். அவர், கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தொடர்ந்து, கன்டெய்னர் லாரியை சோதனையிட்ட போது, உள்ளே வெள்ளை நிற சொகுசு கார் ஒன்றும், ஏ.டி.எம்.களில் கொள்ளை அடிக்கப்பட்ட, ரூ. 66 லட்சமும் இருப்பதைக்கண்டு அவற்றை போலீசார் கைப்பற்றினர்.

மேலும், கன்டெய்னர் லாரியில் பதுங்கி இருந்த, இர்பான் (32), சவுக்கீன் கான் (23), முகமது இக்ரம் (42), சபீர் (26) மற்றும் ஒரு 18 வயது சிறுவன் ஆகிய 5 பேரை வெப்படைபோலீசார் கைது செய்து, குமாரபாளையம் கோர்ட்டில் ஆஜர் செய்தனர். அவர்களை, வரும், அக்டோபர் 10 வரை, ரிமாண்ட் காவலில் வைக்க நீதிபதி அமுதா உத்தரவிட்டார். பின்னர் அவர்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த என்கவுண்டர் சம்பவத்தின்போது, கொள்ளையர்கள் தாக்கியதில், குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ. ரஞ்சித்குமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தநிலையில், கோவை மண்டல போலீஸ் ஐ.ஜி. செந்தில்குமார், சேலம் சரக டி.ஐ.ஜி. உமா ஆகியோர் இன்று ஆஸ்பத்திரிக்கு நேரில் வந்து, சிகிச்சை பெற்று வரும் இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ., ரஞ்சித்குமார் ஆகியோரை சந்தித்து உடல் நலம் விசாரத்து, ஆறுதல் கூறினர். தொடர்ந்து, சம்பவம் நடந்த விபரம் குறித்து கேட்டறிந்தனர். நாமக்கல் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன், திருச்செங்கோடு டிஎஸ்பி இமயவரம்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.

போலீஸ் டிஜிபி நாளை வருகை:

ஏடிஎம் கொள்ளையர்கள் சுட்டதில் காயமடைந்த போலீஸ் அதிகாரிகளை சந்திக்க, தமிழ்நாடு போலீஸ் டிஜிபி சங்கர்ஜிவால் வரும் அக். 1 ம் தேதி நாமக்கல் வருகிறார். அவர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று, காயமடைந்த போலீஸ் அதிகாரிகள் இருவரையும் சந்தித்து ஆறுதல் கூறுவார் என்றும் மேலும், வழக்கு தொடர்பான விவரங்களையும் கேட்டறிவார் என கோவை மண்டல போலீஸ் ஐஜி செந்தில்குமார் தெரிவித்தார். 

Tags:    

Similar News