சீர்காழியில் நகை வியாபாரி மனைவி, மகன் கொலை

Update: 2021-01-27 05:15 GMT

சீர்காழியில் நகை கடை உரிமையாளரை தாக்கி மனைவி மற்றும் மகனை கத்தியால் குத்தி கொலை செய்த மர்ம நபர்கள் வீட்டிலிருந்த சுமார் 17 கிலோ நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி ரயில்வே சாலை பகுதியை சேர்ந்தவர் தன்ராஜ் (50). இவர் சீர்காழி தர்ம குளத்தில் நகைகடை மற்றும் நகை அடகுகடை நடத்தி வருகிறார் .இந்நிலையில் இன்று அதிகாலை தன்ராஜ் மற்றும் அவரது மனைவி ஆஷா (48) மகன் அகில் (25 ) மருமகள் நிகில் ( 24) ஆகியோர் தூங்கிக்கொண்டிருந்தனர். காலை 6:30 மணியளவில் தன்ராஜ் வீட்டின் கதவை தட்டிய மர்ம நபர்கள் ஹிந்தியில் பேசியுள்ளனர். அதனைக் கேட்டு தன்ராஜ் கதவைத் திறந்துள்ளார். இதில் திடீரென அவரைத் தாக்கிய ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் வீட்டிற்குள் புகுந்து ஆஷா, அவரது மகன் அகில் ஆகியோரை அரிவாளால் வெட்டியுள்ளனர். அதனை தடுக்க வந்த நிகிலையும் மர்ம கும்பல் தாக்கியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த ஆஷா மற்றும் அவரது மகன் அகில் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

பின்னர் அந்த மர்ம கும்பல் வீட்டில் இருந்த 17 கிலோ தங்க நகைகள், சிசிடிவி கேமரா பதிவான ஹார்ட் டிஸ்க் ஆகியவற்றை கொள்ளை அடித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை மாவட்ட எஸ்பி ஸ்ரீநாதா, சீர்காழி டிஎஸ்பி யுவபிரியா மற்றும் சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.காயமடைந்த தன்ராஜ் மற்றும் அவரது மருமகள் நிகில் இருவரும் சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர். இச்சம்பவம் சீர்காழி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

Similar News