நாகை அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விவசாய கூலி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-02-21 03:57 GMT

நாகை அருகே சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்துள்ள வடவூர் வடக்குத்தெரு பகுதியை சேர்ந்த மாடசாமி (வயது 40 ) விவசாய கூலி வேலை செய்து வருகிறார்.தனக்கு சொந்தமான இடத்தில் கான்கிரீட் வீட்டிற்கான கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இவர் தனது மனைவி ஜான்சிராணி மற்றும் மகள் கனிஷ்கா ஆகியோருடன் அருகிலுள்ள கூரை வீட்டில் வசித்து வந்துள்ளார்.வழக்கம்போல நேற்று கூரை வீட்டில் மூவரும் தூங்கிக் கொண்டிருந்துள்ளனர்.அப்போது திடீரென வீட்டின் சுவர் இடிந்து விழுந்துள்ளது. உடனடியாக அவர்களது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து, பார்த்ததில் மாடசாமி மற்றும் ஜான்சி ராணி ஆகியோர் பலத்த காயங்களோடு உயிருக்கு போராடி வந்தனர்.

இந்நிலையில் இருவரும் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு  மருத்துவக் கல்லூரிமருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் மாடசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த நிலையில் ஜானசிராணி சிகிச்சை பெற்று வருகிறார்.மேலும் கனிஷ்கா காயங்கள் ஏதுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். வீட்டு சுவர் இடிந்து விழுந்து ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News