நாகை அருகே மதுபோதையில் மூதாட்டியை கொலைசெய்த முதியவர் கைது

போதையில் 62 வயது மூதாட்டியை அடித்துக்கொலை செய்த 65 வயது முதியவரை போலீஸார் கைது செய்தனர்

Update: 2021-09-10 03:58 GMT

மூதாட்டியை  மதுபோதையில் கொலை செய்ததால்  கைது செய்யப்பட்ட முதியவர் சீனிவாசன் (65).

நாகை அருகே போதையில்  மனநலம் பாதித்த 62 வயது மூதாட்டியை  கல்லால் அடித்துக் கொலை செய்த 65 வயது முதியவரை போலீஸார் கைது செய்தனர்.

திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வேப்பஞ்சேரியை சோ்ந்த மாணிக்கம் மனைவி அம்பிகா (62).  கணவர் இறந்து போனதால், சற்று மனநலம் பாதிக்கப்பட்ட அம்பிகா, திருக்குவளையை அருகேயுள்ள  நத்தபள்ளம் கிராமத்தில்,  தனது சகோதரா் ராஜேந்திரன் வீட்டின் அருகே 10 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்தார்.  இவா் நேற்று தலையில்  காயங்களுடன் இறந்து கிடந்தாா்.  இதுகுறித்து, திருக்குவளை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், சந்தேகத்தின் பேரில், நத்தப்பள்ளம் வடக்குத்தெரு பகுதியைச் சேர்ந்த முதியவர்  வீ.சீனிவாசன் (65) என்பவரை  பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தான், மது போதையில் இருந்த பொழுது, அம்பிகாவிடம் சில்மிஷம் செய்ததாகவும், அப்போது ஏற்பட்ட தகராறில்  கல்லால் தாக்கியதாகவும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, போலீஸார்  அவரை கைது செய்து,  நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.


Tags:    

Similar News