இலங்கைக்கு கடத்த முயன்ற உயர் ரக கஞ்சா கைப்பற்றல்

Update: 2021-03-15 06:00 GMT

நாகை அருகே கடலில் மிதந்து வந்த 6 கிலோ உயர் ரக கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டது.

நாகப்பட்டினம் மாவட்ட கடற்கரையில் இருந்து அதே ஊரைச் சேர்ந்த தவமணி என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அவர் உள்ளிட்ட 3 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.பின்னர் மீன்பிடித்து விட்டு கரை திரும்பிய போது இரண்டு நாட்டிகல் மைல் தொலைவில் கடலில் மூட்டைகள் மிதந்து வருவதைக் கண்டனர். இதனால் சந்தேகமடைந்த மீனவர்கள் அதன் அருகில் சென்று மூட்டைகளை மீட்டு பார்த்த பொழுது அது கஞ்சா பொட்டலங்கள் என தெரியவந்தது. இதையடுத்து கண்டெடுக்கப்பட்ட கஞ்சா பொட்டலங்களுடன் கரை திரும்பிய மீனவர்கள் இதுகுறித்து கீழையூர் கடலோர காவல் குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் அங்கு வந்த கீழையூர் கடலோர காவல் குழும போலீசாரிடம், மீனவர்கள் 6 கிலோ கஞ்சா பொட்டலங்களை ஒப்படைத்தனர். கடலில் மிதந்த வந்த பல லட்ச ரூபாய் மதிப்புள்ள உயர் ரக கஞ்சா பொட்டலங்கள் இலங்கைக்கு கடத்தி சென்ற போது அவ்வழியே ரோந்து சென்ற கடற்படை வீரர்களை கண்டதும் கடத்தல் கும்பல் கஞ்சா பொட்டலங்களை கடலில் தள்ளி விட்டு தப்பி சென்றனரா? என்ற கோணத்தில் நாகை கடலோர காவல் குழும போலீசாரும், கியூ பிரிவு போலீசாரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News