காற்றில் பறந்த அதிமுக தலைமை உத்தரவு - திரும்பிய பக்கம் எல்லாம் பேனர்
அதிமுக தலைமை உத்தரவை மீறி வேப்பனஹள்ளி சாலையோரம் அதிகளவில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.;
கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி, சென்னையில், சாலையில் சென்ற குரோம்பேட்டையைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் சுபஸ்ரீ ரவி மீது விழுந்தது. பேனர் விழுந்ததால் நிலை தடுமாறிய சுபஸ்ரீ சாலையில் விழுந்தார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறியதில் காயமடைந்த சுபஸ்ரீ மரணமடைந்தார்.
இதனையடுத்து, பொது இடங்களில் பேனர் வைப்பது குறித்து, நீதிமன்றம், கடுமையாக விமர்சனம் செய்தது. இதனையடுத்து அதிமுக, திமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் பொது இடங்களில் பேனர் வைக்க கூடாது என்று உத்தரவிட்டனர்.
இந்நிலையில், வேப்பனப்பள்ளி தொகுதியில் சட்டமன்ற அலுவலகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு வந்த கே.பி.முனுசாமியை வரவேற்கும் விதமாக, வேப்பனப்பள்ளி பிரதான சாலையில் சாலையின் இருபுறங்களிலும் பெரிய பெரிய பேனர்கள் அதிமுகவினர் சார்பில் வைக்கப்பட்டிருந்தன.
சாலையோர கடைகளை ஆக்கிரமித்து பேனர்கள் வைக்கப்பட்டதால் வியாபாரிகள் பெருமளவு பாதிக்கப்பட்டனர். காற்று அதிகமாக இருந்ததால், பேனர்கள் அசைய, வாகன ஓட்டிகளும் பதற்றமுடையேயே அப்பகுதியை கடந்து சென்றனர். இன்று வரை அந்த பேனர்கள் அப்படியே உள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவு காற்றில் பறக்கவிட்டிருப்பது, சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
அதிமுக தலைமையின் உத்தரவை உள்ளூர் கட்சி நிர்வாகிகள் மதிக்காமல் இருப்பது, கட்சி தலைமைக்கே அவப்பெயரை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் உணர வேண்டும். அதேபோல், அரசியல் கட்சிகள் பேனர் வைத்திருப்பதை, சம்மந்தப்பட்டவர்கள் கண்காணித்து, உடனடியாக அகற்ற வேண்டும்; விபத்து ஏற்படும் முன்பு அதிகாரிகள் விழித்துக் கொள்ள வேண்டும் என்பதே, பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.