3 குழந்தைகளுடன் குளியலறையில் வசிக்கும் பெண்: உடனடி நிதியுதவி அளிக்குமா அரசு ?
ஊத்தங்கரை அருகே தொடர் மழையால் வீடு சேதமடைந்ததால், 3 குழந்தைகளுடன் பெண் ஒருவர் குளியலறையில் வசித்து வருகிறார்.;
தொடர் மழையால் இடிந்து விழுந்த வீடு.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த சாமல்பட்டியை சேர்ந்தவர் ராதா(27). இவர் தன்னுடைய மூன்று குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். கணவர் பழனி மூன்று மாதங்களுக்கு முன்பு கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
தற்போது பெய்து வந்த கனமழையின் காரணமாக ராதா குடியிருந்த வீட்டின் பக்கவாட்டு சுவர்கள் இடிந்து விழுந்ததால், வீட்டில் தங்க வழி இன்றி ராதா தன் குழந்தைகளுடன் குளியல் அறையாக பயன்படுத்தி வந்த அறையை தற்போது இருப்பிடமாக மாற்றி வசித்து வருகின்றனர்.
இரவு நேரங்களில் தங்களின் உடைமைகளை வெளியில் வைத்துவிட்டு, அவர்களுடைய மூன்று குழந்தைகளுடன் குளியல் அறையில் தங்கி வருகின்றனர்.
பல முறை ஊராட்சி மன்ற தலைவரிடம் தங்களின் நிலைமையை எடுத்து கூறியும், இவர்களை அரசு அதிகாரிகளோ, ஊராட்சி மன்றத் தலைவரோ கண்டு கொள்ளவில்லை என வேதனையுடன் கூறுகின்றனர்.
அவர்கள் வசிப்பதற்கு இடம் இல்லாமலும், வேலைகளுக்கு செல்ல முடியாமலும் சிரமப்பட்டு வருவதால் தங்களுக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என கண்ணீருடன் வேண்டுகோள் விடுதனர்.