ஊத்தங்கரையில் 2 வீடுகளில் ரூ.50 லட்சம், 20 பவுன் நகைகள் திருட்டு
ஊத்தங்கரையில் 2 வீடுகளில் ரூ.50 லட்சம் ரொக்கம் மற்றும் 20 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.;
ஊத்தங்கரையில் 2 வீடுகளில் நடந்த திருட்டு தொடர்பாக, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி நேரில் விசாரணை நடத்தினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காமராஜ் நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார் (40). அவரது வீட்டுக்கு அருகில் வசந்தகுமார் (37) என்ற லாரி டிரைவர் வசித்து வருகிறார். இருவரும், வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்தனர். இந்நிலையில் சிவக்குமார் மற்றும் வசந்தகுமார் ஆகியோரின் வீடுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு கதவுகள் திறந்த நிலையில் இருந்தது.
இந்த திருட்டு குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி நேரில் சென்று விசாரணை நடத்தினார். கைரேகை நிபுணர்களும் திருட்டு நடந்த வீடுகளுக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது. ஊத்தங்கரையில் ஒரே பகுதியில் அடுத்தடுத்த வீடுகளில் திருட்டு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.