போலி முகநூல் பக்கத்தில் ஆபாச படங்கள் பதிவு செய்த வாலிபர்: குண்டர் சட்டத்தில் கைது
குமரியில் பெண்களை ஆபாசமாக சித்தரித்து போலி முகநூல் பக்கத்தில் பதிவு செய்த வாலிபரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.;
கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டு இளம் பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து போலி முகநூல் பக்கங்களில் பதிவு செய்த நபர் குறித்த புகாரின் பேரில் கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்தரை நாராயணன் உத்தரவிட்டார்.
இதுதொடர்பாக சைபர் க்ரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், போலி முகநூலில் பெண்களை ஆபாசமாக சித்தரித்து பதிவு செய்தது குமரி மாவட்டம் காஞ்சாம்புரம் பகுதியை சேர்ந்த சுரேஷ் (26) என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த வாலிபரை கைது செய்த மாவட்ட சைபர் கிரைம் போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட சுரேஷ் மீது ஏற்கனவே வழக்குகள் இருப்பதாக கூறப்படும் நிலையில் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.
இந்த பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் அரவிந்த், குற்றவாளியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். அதன்படி சுரேஷ் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார் அவரை கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர். இதனிடையே பெண்களுக்கு எதிராக சமூகவலைத்தளங்களில் தவறாக பதிவிடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.