ஹவாலா பணம் வழங்குவதாக கூறி 18 லட்சம் மோசடி - இருவர் கைது

கன்னியாகுமரி அருகே ஹவாலா பணம் வருவதாக கூறி 18 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

Update: 2021-05-06 00:45 GMT

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே கஞ்சிக்குழி பகுதியை சேர்ந்த ஜபமணி உட்பட இரண்டு நபர்களிடம் ஹவாலா பணம் தருவதாக கூறி 18 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்ட ஜபமணி என்பவர் போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் தக்கலை தனிப் பிரிவு போலீசார் இந்த நூதன கொள்ளையில் ஈடுபட்ட கும்பலை தேடி வந்தனர். இந்த நிலையில் ஜபமணி என்பவரை வைத்தே அந்த கும்பலிடம் ஒரு கோடி ரூபாய் பணம் மாற்ற வேண்டும் என போலீசார் கூறினார்.

அதன்படி அந்த கும்பலை சேர்ந்த இருவர் மார்த்தாண்டம் அருகே சாங்கை பகுதியில் ஒரு கோடி ஹவாலா பணத்தை வாங்க வர கூறியுள்ளது. இந்த நிலையில் அந்த கும்பல் வர கூறியிருந்த பகுதியில் தனிப் பிரிவு போலீசார் மற்றும் மார்த்தாண்டம் போலீசார் பதுங்கி இருந்தனர்.

தனது மோசடி வேலையை தொடங்கிய மோசடி கும்பலை சேர்ந்த மார்த்தாண்டம் அருகே பாளையங்கட்டி பகுதியை சேர்ந்த மணிகண்டன் (40) மற்றும் அருமனை அருகே வெள்ளாங்கோடு பகுதியை சேர்ந்த ஜான் (38) ஆகிய இருவரையும் மடக்கி பிடித்தனர். இவருடன் இருந்த மூன்று நபர்கள் தப்பி ஓடினர்.

பிடிபட்ட இருவரிடம் இருந்து ஒரு சாக்கு மூட்டையில் பேப்பர் தாள்கள்களை அடுக்கி வைத்து அதன் மீது 2000 ரூபாய் 500 ரூபாய் தாள்களை ஒட்டி வைத்து இருந்த போலி பணமூட்டையை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இவர்கள் இதுபோல் பலகோடி ரூபாய் ஹவாலா பணத்தை கொடுப்பதாக கூறி அந்த பணத்தை வாங்க வரும் போது ஹவாலா பணத்துக்கு பதிலாக எதிர் நபர் கொண்டுவரும் கணக்கில் வந்த லட்சக்கணக்கான பணத்தை வாங்கிவிட்டு போலீஸ் வருவதாக கூறி அவர்களும் தப்பி ஓடி வருபவர்களையும் ஓட வைத்து விட்டு பணத்தை கொள்ளையடித்து செல்வதும் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் சிக்கிய இருவரையும் மார்த்தாண்டம் காவல்நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருவதுடன் தப்பி ஓடிய மூன்று நபர்களையும் தேடி வருகின்றனர்.

இந்த கும்பல் இதுபோல் பலரிடம் இதுபோல் மோசடி செய்ததாக தெரிய வந்துள்ளது. இவர்களது வலையில் சிக்கி பணம் இழந்த பலரும் அதிக பண ஆசைக்காக தங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை பறிகொடுத்துவிட்டு புகார் அளிக்காமல் இருப்பது குறிப்பிடதக்கது.

Tags:    

Similar News