கனமழையால் துண்டிக்கப்பட்ட பாலம் - குமரியில் 350 குடும்பங்கள் தவிப்பு

கன்னியாகுமரியில், கனமழையால் பாலம் துண்டிக்கப்பட்ட நிலையில், 350 குடும்பங்கள் தவித்து வருகின்றன.

Update: 2021-09-27 14:15 GMT

 பெருஞ்சாணி அணைக்கு செல்லும் நீர் ஓடு பாதையில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால், குறுக்கே அமைந்துள்ள தற்காலிக பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. 

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், ஆரல்வாய்மொழி, மார்த்தாண்டம் உட்பட மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல் தொடங்கி விடிய விடிய பெய்தது. மாவட்டத்தின் மலையோர பகுதிகளிலும் கனமழை தொடர்ந்து நீடித்து வருவதால் மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு 1, சிற்றாறு 2 உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையில் இருந்து உபரி நீர் பெருமளவில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  கீரிப்பாறை மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் இருந்து பெருஞ்சாணி அணைக்கு செல்லும் நீர் ஓடு பாதையில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தின் காரணமாக நீர்ஓடு பாதையின் குறுக்கே அமைந்துள்ள தற்காலிக பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால், அரசு ரப்பர் கழக குடியிருப்பு செல்லும் பாதை துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனால், அப்பகுதியில் 350 குடும்பங்கள் தவித்து வருகின்றன. மீட்புக் குழுவினர்,அப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.

Tags:    

Similar News