குமரியில் வெடி மருந்து வெடித்ததில் 15 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்: 15 பேர் காயம்

குமரியில் வெடி மருந்து வெடித்ததில் 15 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்ததோடு சிறுமிகள் உட்பட 15 பேர் காயம்

Update: 2022-03-20 14:15 GMT

கன்னியாகுமரி மாவட்டம், தர்மபுரம் பகுதியில் வெடி வெடித்ததால் சேதமடைந்த வீடு

கன்னியாகுமரி மாவட்டம், ஈத்தாமொழி அருகே தர்மபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன், இன்று இரவு இவரது வீட்டின் பின்புறம் இருந்து பயங்கர சப்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த சம்பவத்தில் அக்கம் பக்கத்தில் உள்ள 15 க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த கதவுகள், ஜன்னல்கள், பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்கள் உடைந்து சிதறியது. மேலும் மூன்று மரங்கள் உடைந்து விழுந்தது, அருகில் உள்ள வீடுகளில் இருந்த சிறுமிகள் உட்பட 15 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.கண்ணிமைக்கும் நேரத்தில் நடைபெற்ற இச்சம்பவம் குறித்து அறியாத பொதுமக்கள் நிலநடுக்கம்  ஏற்பட்டு  விட்டதோ  என்ற அச்சத்துடன்  வீட்டை விட்டு அலறி அடித்து வெளியேறினார்கள்.

 தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்க்கு வந்த ஈத்தாமொழி போலீஸார்  நடத்திய முதற்கட்ட விசாரணையில் ராஜேந்திரன் தனது வீட்டின் பின்புறம் அனுமதியின்றி பட்டாசுகள் தயாரிப்பதற்காக வெடிமருந்து பொருட்களை வாங்கி பதுக்கி வைத்து இருந்துள்ளார்.

இந்த வெடி மருந்துகள் எதிர்பாராத விதமாக வெடித்து விபத்து ஏற்பட்டதும் தெரிய வந்தது, இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த  போலீஸார் ராஜேந்திரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 15 ஆம் தேதி ஆறுதெங்கன் விளை பகுதியில் அனுமதி இன்றி பட்டாசு தயாரிக்க வைக்கப்பட்டு இருந்த வெடிபொருள் வெடித்த விபத்தில் 10 வயது சிறுமி ஒருவர் பலியான நிலையில் தற்போது மீண்டும் வெடி விபத்து நடந்து இருப்பது அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News