சிறுமியோடு உல்லாசமாக சுற்றிய காதலன் உட்பட 4 பேர் போக்சோவில் கைது..!

படிக்கும் வயதில் காதல் செய்து சிறைவாசம் அனுபவிக்கும் இளைஞர்கள்.

Update: 2021-06-09 12:08 GMT

கைது செய்யப்பட்ட நான்கு இளைஞர்கள்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே அனந்தன்பாலம் பகுதியை சேர்ந்தவர் 21 வயதான ஆல்டோ மைக்கேல்.

இவர் குளச்சல் அருகேயுள்ள  17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜூன் 3 ம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய மாணவி ஆல்டோ மைக்கேலுடன் பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சிறுமியை அழைத்து கொண்டு எங்கே செல்வது என தெரியாமல் திகைத்து நின்ற ஆல்டோ மைக்கேல் தனது நண்பரான காட்வின் மிஸ்வாக் (21) என்பவரிடம் தனது நிலையை கூறி உதவி கேட்டுள்ளார்.

காதலர்கள் தங்குவதற்கு தனது நண்பரான சூர்யா (20) என்பவரின் தாத்தா வீடு பூதப்பாண்டி அருகே வனப்பகுதிக்கு அருகாமையில் உலக்கைஅருவி பகுதியில் இருப்பதையும் அங்கு இருவரும் சென்று தங்கி கொள்ளலாம் என நண்பர் கூறிய நிலையில் காதலர்கள் இருவரும் வனப்பகுதியில் உள்ள உலக்கை அருவி சென்று தங்கி உள்ளனர்.

இதனிடையே காதலர்களுக்கு தேவையான உணவு பொருட்களை வாங்கி கொண்டு காட்வின் தனது நண்பர்களான சூர்யா (20), கிஷோர் குமார் (19) ஆகியோருடன் உலக்கை அருவி சென்று அங்கேயே தங்கி உள்ளனர்.

இந்நிலையில் சிறுமியின் பெற்றோர் மகளை காணவில்லை என குளச்சல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார் புகார் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் நான்கு வாலிபர்களுடன் சிறுமி ஒருவர் ரகசியமாக உலக்கை அருவி அருகிலுள்ள வீட்டில் இருப்பதாக பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தொடர்ந்து அங்கு சென்று சிறுமி மற்றும் வாலிபர்களை அழைத்து வந்த பூதப்பாண்டி போலீசார் , நாகர்கோவிலில் உள்ள அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அங்கு போலீசார் மேற்கொண்ட விசாரணையில் மீட்கப்பட்டது குளச்சல் பகுதியை சேர்ந்த காணாமல் போன சிறுமி என்பதும் சிறுமியை காதல் ஆசைக்காட்டி ஆல்டோ மைக்கேல் பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து சிறுமியின் காதலன் ஆல்டோ மைக்கேல் மற்றும் அவர்களுக்கு துணை போன நண்பர்கள் 3 பேர் என 4 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்த போலீசார் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு பின் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News