விசைப்படகு சேட்டிலைட் கருவிக்கு அதிக கட்டணம் - அரசுக்கு மீனவர்கள் எச்சரிக்கை.

விசை படகுகளுக்கு கொடுத்த சேட்டிலைட் கருவிக்கு அதிக கட்டணம் வசூல் செய்யப்படும் நிலையில் அரசுக்கு மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-06-10 12:30 GMT

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து அதிகப்படியான மீனவர்கள் விசைப் படகுகள் மூலம் மீன்பிடிக்க செல்கின்றனர்.

இந்த மீனவர்கள் தொலை தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது இயற்கை சீற்றம், புயல் எச்சரிக்கை போன்றவற்றை தெரிவிப்பதற்காக மத்திய மாநில அரசுகள் சேட்டிலைட் போன்களை வழங்கியுள்ளன.

இந்த போன்களுக்கு மாதம்தோறும் மீனவர்கள் 1481 ருபாய் செலுத்தி பயன்படுத்தி வந்தனர். தற்போது பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த தொகையை எந்த முன்னறிவிப்பும் இன்றி கடந்த ஏப்ரல் மாதம் முதல் மாதத்தவணையை 3441 ஆக உயர்த்தியதோடு தவறும் பட்சத்தில் ஒரு போனுக்கு 12 ஆயிரம் ருபாய் அபராதமும் விதித்துள்ளது.

தற்போது மீனவர்கள் கொரோனா காரணமாகவும், மீன்பிடி தடையாலும் வாழ்வாதாரம் இழந்து இருக்கும் நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ள இந்த தொகையை கட்ட முடியாத நிலை உருவாகி உள்ளது.

மேலும் புதிதாக உயர்த்தபட்ட விலையை குறைத்தும் அபராதத்தொகை இல்லாமலும் தொடர்ந்து சேவை வழங்கினால் மட்டுமே தொடர்ந்து இந்த சேட்டிலைட் போன்களை விசைப்படகு மீனவர்கள் பயன்படுத்துவவோம் என்றும் தவறும் பட்சத்தில் வரும் 20 ம் தேதி குளச்சல் மீன்வளத்துறை அலுவலகத்தில் அனைத்து சேட்டிலைட் போன்களையும் திரும்ப ஒப்படைக்க போவதாகவும் தூத்தூர் புனித தோமையார் விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் சங்கத்தினர் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News