மாமிசக் கழிவுகளை கொட்ட வந்த வாகனம் - பொறி வைத்து பிடித்த பொதுமக்கள்
குமரியில் மாமிச கழிவுகளை கொட்ட வந்த வாகனத்தை பொதுமக்கள் பொறி வைத்து பிடித்தனர்.;
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் நகர் அருகே, பரம்பை பகுதியில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு இடையே கடந்த சில வாரங்களாக இரவு நேரங்களில் மாமிசக் கழிவுகளை மர்மநபர்கள் கொட்டிச் சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், நேற்று இரவு முதல் விடிய விடிய அப்பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் இன்று அதிகாலையில் டெம்போவில் வந்த மூன்று இளைஞர்கள், மாமிசக் கழிவுகளை அப்பகுதியில் கொட்ட முயற்சித்தனர்.
உடனடியாக அவர்களை சுற்றி வளைத்து சிறைப்பிடித்த ஊர்மக்கள் அவர்களிடம் விசாரித்தபோது, அவர்கள் நெல்லை மாவட்டம் பணக்குடியை சேர்ந்த சார்லஸ், ஐயப்பன், சுரேஷ் என்பது தெரிய வந்தது. இவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மாமிசக் கழிவுகளை வாங்கி, பணகுடி பகுதிக்கு கொண்டு சென்று புதைத்து வருவதாகவும் , செல்லும் வழியில் சில கழிவுகளை ஆங்காங்கே கொட்டி சென்றதாகவும் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து மூவரையும் அப்பகுதி மக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.