மன்னர் குடும்பத்தினர் வழிபட்ட கோவில் - பராமரிப்பின்றி பாழடைந்த பரிதாபம்

கன்னியாகுமரியில், மன்னர் குடும்பத்தினர் வழிபட்ட கோவில், தற்போது பராமரிப்பின்றி பாழடைந்து காணப்படுகிறது.

Update: 2021-10-05 15:15 GMT

திக்குறிச்சி கொட்டாரத்துவிளை பள்ளியறை பகவதி கோயில்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்து அறநிலைய துறைக்கு சொந்தாமான 490 கோயில்களில் ஒன்றாக உள்ளது திக்குறிச்சி கொட்டாரத்துவிளை பள்ளியறை பகவதி கோயில். திருவாங்கூர் சமஸ்தான மன்னர் குடும்பத்தினர் தினம் தோறும் வணங்கி திருவிழா கண்ட இந்த பாரம்பரியமிக்க கோவிலுக்கு,  அரச குடும்பம் சார்பில் கோவில் நித்திய பூஜைகளுக்காக சொத்துக்களும் எழுதி வைக்கப்பட்டன.

தமிழக அரசின் இந்து அறநிலைய கட்டுப்பாட்டில் இந்த கோவில் கொண்டு வரப்பட்ட பின்னர், கோவில் சொத்துக்கள் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டதாகவும்,  இதனை கண்டுகொள்ளாத இந்து அறநிலைய துறை அதிகாரிகள், வருமானம் இல்லாத கோவில் என கூறி கடந்த 30 ஆண்டுகளாக கோவிலில் பூஜைகள் இன்றி பூட்டி போட்டதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக சிதிலமடைந்தும், ஓடுகள் உடைந்தும், புல், புதற்கள் பிடித்து காட்சியளித்து வருகிறது. கோயில் அருகே இருந்த மன்னர் கால அரண்மனை, இருந்த இடம் தெரியாத அளவில் மாறி உள்ளது. கோயிலின் ஆராட்டு படித்துறை ஆக்கிரமிப்பாளர் வசம் சிக்கி உள்ளது. இது சம்பந்தமாக இந்து அறநிலைய துறைக்கு பக்தர்கள் பல முறை புகார்கள் அளித்தும் இந்து அறநிலைய துறை நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில், விஸ்வாமித்திரர் சைவ சபாவின் அம்மையே அப்பா உழவாரபணி குழு சார்பில்,  25 சேவகர்கள் கோவிலில் புதர்களை அகற்றி உழவாரபணியில் ஈடுபட்டனர். இந்த கோயிலை உடனே திருப்பணிகள் செய்வதோடு,  பூசாரியை நியமித்து தினசரி நடை திறந்து பூஜைகள் நடத்த நடவடிக்கை எடுக்க,  இந்து அறநிலைய துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News