குமரியில் மதுப்பிரியர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து

குமரி மாவட்டத்தில் டாஸ்மாக் திறக்கப்பட உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.

Update: 2021-06-13 08:50 GMT

தமிழகத்தில் நோய்களின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் தரவுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவித்துள்ள அரசு, நோய் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களை தவிர பிற அனைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகளை திறக்க உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை 147 டாஸ்மாக் கடைகள் இயங்கி வரும் நிலையில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் நாளை திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மாவட்டத்திள் உள்ள எந்த ஒரு டாஸ்மாக் கடைகளிலும் சுத்தப்படுத்தும் பணி மற்றும் பாதுகாப்பு பணி நடைபெறவில்லை, குறிப்பாக நாகர்கோவில் மாநகரின் முக்கிய பகுதிகளான வடசேரி, மீனாட்சிபுரம், செட்டிக்குளம் உள்ளிட்ட கடைகளில் எப்போதும் மது பிரியர்களின் கூட்டம் கணிசமாக காணப்படும்.

இந்நிலையில் அந்த கடைகள் அனைத்தும் தூசி படிந்தும் சுகாதாரம் இன்றியும் காணப்படுகின்றது, நகர்ப்புறம் மட்டுமல்லாது கிராமப்புறங்களிலும் இதே நிலை நீடித்து வருகிறது.

மேலும் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாத நிலையில் நாளை கடைகள் திறக்கப்பட்டு கூட்டம் அதிகரித்தால் நோய் தொற்று பரவல் கணிசமாக உயரும் என்று தெரிகிறது.

முந்தைய ஆட்சிக் காலகட்டத்தில் ஊரடங்கு நேரத்தில் மதுக்கடைகளை திறப்பது தேவைதானா என கேள்வி எழுப்பிய தற்போதைய முதல்வர் தற்போது ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க உத்தரவிட்டுள்ள நிலையில் முறையான பாதுகாப்பு மற்றும் சுகாதார வசதிகள் கூட செய்யாமல் டாஸ்மாக் கடைகளை திறப்பது கண்டிக்கத்தக்கது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்

Tags:    

Similar News