வேலை வாங்கி தருவதாக அழைத்து சென்று பெண்ணுக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது

ஈரோடு மாவட்டம் கோபி அருகே வேலை வாங்கித் தருவதாக கூறி அழைத்துச் சென்று பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Update: 2024-05-24 01:30 GMT

பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கைது செய்யப்பட்ட தரண்.

கோவை மாவட்டம் வடமதுரை பகுதியைச் சேர்ந்த 21 வயது பெண் ஒருவர் தனது கணவருடன் வசித்து வருகிறார். அந்த பெண், அவரது கணவருடன் கோவையில் உள்ள நிறுவனத்தில் வேலை செய்துள்ளார். அப்போது, அங்கு ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையத்தைச் சேர்ந்த தரண் (19) என்பவர் அறிமுகமாகி உள்ளார். தரண் அந்த நிறுவனத்தில் இருந்து வேலையை விட்டு நின்ற பிறகும், அந்த பெண்ணின் கணவருடன் தரண் போனில் பேசி வந்துள்ளார்.

அப்போது தங்களுக்கு சம்பளம் குறைவாக கிடைப்பதால், அந்த பெண்ணின் கணவர் கோபியில் ஏதேனும் வேலை இருந்தால் தெரிவிக்கும்படி தரணிடம் கூறியுள்ளார். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு தரண் வேலை வாங்கி போனில் தருவதாக கூறினார். இதை நம்பி அந்த பெண் தனது கணவருடன் 22ம் தேதி கோவையில் இருந்து கோபி பேருந்து நிலையம் வந்துள்ளனர்.

அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த தரண் அந்த பெண்ணின் கணவரை பேருந்து நிலையத்தில் இருக்க சொல்லிவிட்டு,  கொளப்பலூரில் உள்ள கம்பெனியில் வேலை வாங்கித் தருகிறேன் என்று கூறி அந்த பெண்ணை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார்.

இதை நம்பிய அந்த பெண்ணை தரண் இருசக்கர வாகனத்தில் கோபி வேட்டைக்காரன் கோவிலில் உள்ள எல்பிபி வாய்க்காலில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, அங்கு தரண் அந்த பெண்ணை பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். மேலும் இது குறித்து வெளியே சொன்னால் கொன்று விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்.

பின்னர், அந்த பெண்ணை தரண் இருசக்கர வாகனத்தில் ஏற்றி கொளப்பலூர் கூட்டி சென்றுள்ளார். பின்னர், அங்கு அந்த பெண் தனது கணவரை போன் மூலம் வரவழைத்துள்ளார். அங்கு வந்த அந்த பெண்ணின் கணவரிடம் வேலைக்கு வந்தால் மட்டும் போதும் என்று கூறி விட்டு தரண் சென்றுள்ளார்.

பின்னர், அந்த பெண் தனது கணவருடன் கோபி பேருந்து நிலையம் வந்துள்ளார். அங்கு தனக்கு நடத்தை பாலியல் தொல்லை குறித்து கூறியுள்ளார்.

இதனையடுத்து, அந்த பெண்ணின் கணவர் கோபி காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் செய்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி தரணை கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News