அந்தியூர் மூதாட்டி கொலை வழக்கில் தொழிலாளிக்கு 17 ஆண்டு சிறை
மூதாட்டியை கொலை செய்து நகையைத் திருடிய வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.;
ஈரோடு மாவட்டம் அந்தியூர் செல்லப்பம்பாளையம், சின்னதம்பிபாளையத்தை சேர்ந்தவர் பொன்னம்மாள் (வயது 85). வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார்.. பர்கூர் பெஜிலிபாளையத்தை சேர்ந்த செங்கல் சூளை தொழிலாளியான குமார் (வயது 28) வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். கடந்த, 2016 மே 18-ல் அசலுடன் சேர்த்து வட்டி தருவதாக கூறி, பைக்கில் வீட்டுக்கு அழைத்து செல்வதாக கூறி, பர்கூர் மலைப்பாதைக்கு அழைத்து சென்றார். அடர்ந்த வனத்தில் மூதாட்டியை கொலை செய்து, அவர் அணிந்திருந்த தங்க நகையை பறித்து சென்றார்.விசாரணை செய்த அந்தியூர் போலீசார், குமார் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த, அந்தியூர் நகலூர் பிரிவை சேர்ந்த செங்கல் சூளை தொழிலாளி லோகநாதன் ஆகியோரை கைது செய்தனர்.
இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். ஈரோடு மகளிர் விரைவு நீதிமன்றத்தில், வழக்கு விசாரணை நடந்தது. நீதிபதி மாலதி நேற்று தீர்ப்பளித்தார். குமாருக்கு மூன்று பிரிவுகளில் ஆயுள் தண்டனை, 17 ஆண்டு சிறை தண்டனை, 7,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். லோகநாதன் விடுதலை செய்யப்பட்டார். தற்போது சிறையில் இருந்த குமார், தீர்ப்புக்காக நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டிருந்தார். வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜெயந்தி ஆஜரானார்.