சென்னிமலை அருகே வீடு புகுந்து 9 பவுன் நகை திருடிய தொழிலாளி கைது

சென்னிமலை அருகே வேலை கொடுத்து உதவிய விவசாயி வீட்டில், 10 பவுன் நகை திருடி தப்பிய தொழிலாளியை போலீசார் சிறையில் அடைத்தனர்.

Update: 2021-11-30 05:15 GMT

கைது செய்யப்பட்ட செல்வகுமார்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலையை அடுத்த அய்யம்பாளையம், உடையார் தோட்டத்தை சேர்ந்தவர் பூபதி. விவசாயியான இவரது தோட்டத்தில், குடோன் கட்டும் பணி நடந்தது. பொறையன்காட்டை சேர்ந்த செல்வகுமார்(வயது 30) இப்பணியில் ஈடுபட்டார். வேலை முடிந்ததும் தனக்கு வேறு ஏதாவது வேலை தருமாறு பூபதியிடம் கேட்கவே, தோட்டத்தில் கூலி வேலை கொடுத்துள்ளார். சில நாட்களுக்கு முன் பூபதி, திடீரென வேலையை விட்டு நின்று விட்டார். இந்நிலையில் அய்யம்பாளையம் பகுதியில் ஒரு கடைக்காரரிடம், 10 பவுன் நகைகளை காட்டி, விற்று தருமாறு செல்வகுமார் கேட்டுள்ளார். சந்தேகமடைந்த அவர் பூபதியிடம் இதை தெரிவித்துள்ளார்.

இதன் பிறகே வீட்டில் பீரோவில் தேடியபோது, இரண்டு தங்கச்சங்கிலி, ஒரு மோதிரம் என 10 பவுன் நகை திருட்டு போனதும், செல்வகுமார் கைவரிசை காட்டியதும் தெரிந்தது. அவரை வலை வீசி தேடி வந்தார். இந்நிலையில் செல்வகுமாரை சென்னிமலையில் நேற்று பிடித்த பூபதி, போலீசாரிடம் ஒப்படைத்தார். விசாரணையில், 10 பவுன் நகையை திருடியதை ஒப்புக் கொண்டார். ஒரு நகையை தனியார் நிறுவனத்தில் அடகு வைத்து பணம் பெற்றதாகவும், ஒரு நகை, மோதிரம் தன்னிடம் இருப்பதாக தெரிவித்தார். நகையை பறிமுதல் செய்த போலீசார் செல்வகுமாரை கைது செய்தனர். பெருந்துறை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஈரோடு மாவட்ட சிறையில் நேற்று அடைத்தனர்.

Tags:    

Similar News