பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து வியாழக்கிழமை (மே.2) இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 142 கன அடியிலிருந்து 46 கன அடியாக சரிந்துள்ளது.

Update: 2024-05-02 02:30 GMT

பவானிசாகர் அணை.

பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து வியாழக்கிழமை (மே.2) இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 142 கன அடியிலிருந்து 46 கன அடியாக சரிந்துள்ளது.

தமிழ்நாட்டில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும். இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக அணையின் நீர் பிடிப்பு பகுதியில் போதிய மழை இல்லாததால், பவானிசாகர் அணைக்கு வந்து சேரும் பவானி ஆறு மற்றும் மாயாற்றில் நீர்வரத்து வெகுவாக குறைந்து விட்டது. நேற்று (புதன்கிழமை) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 142 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 46 கன அடியாக சரிந்துள்ளது.

மேலும், அணைக்கு வரும் நீரின் அளவைவிட அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. தற்போது, அணையின் நீர்மட்டம் 45 அடியாக சரிந்துள்ளது. இதனால், அணை நீர்த்தேக்கப் பகுதியில் மண்திட்டுகள், மலைக்குன்றுகள் தெரிகின்றன. ஆங்காங்கே குட்டைபோல நீர்ப்பிடிப்பு பகுதி தெரிவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

வியாழக்கிழமை (மே.02) இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்ட நிலவரம்:-

நீர் மட்டம் - 45.39 அடி,

நீர் இருப்பு - 3.42 டிஎம்சி,

நீர் வரத்து வினாடிக்கு - 46 கன அடி,

நீர் வெளியேற்றம் வினாடிக்கு - 205 கன அடி,

அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடி நீரும், பவானி ஆற்றில் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 200 கன அடி நீரும் என மொத்தம் வினாடிக்கு 205 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News