கர்நாடகாவுக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற அண்ணன், தம்பி கைது

தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 1,150 கிலோ ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2024-02-21 07:00 GMT

சரக்கு வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்திய இருவரையும், கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஆகியவற்றை படத்தில் காணலாம்.

தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 1,150 கிலோ ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர்.

குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல்துறை தலைவர் ஜோசி நிர்மல்குமார் உத்தரவுபடி, கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் சந்திரசேகரன் மற்றும் ஈரோடு சரக காவல் துணைக்கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் ஆகியோர் மேற்பார்வையில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க ஈரோடு மாவட்டத்தில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, ஈரோடு மாவட்டம் தாளவாடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட திகிஞாரை பகுதியில் ரேஷன் அரிசியை கடத்தி செல்வதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், காவல் ஆய்வாளர் ரமேஷ்கண்ணன், உதவி ஆய்வாளர் மூர்த்தி ஆகியோர் தலைமையிலான காவல்துறையினர் திகிஞாரை, அரசு பள்ளி அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது 23 மூட்டைகளில் 1,150 கிலோ ரேஷன் அரிசி மற்றும் ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனம் ஆகியவை இருந்ததை கண்டுபிடித்தனர். இதனையடுத்து, ரேஷன் அரிசியை கடத்தி வந்த கர்நாடக மாநிலம் மைசூர் சோசலே ஹோப்லி பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் சபியுல்லா (வயது 23), முகம்மது உசேப் (வயது 26) ஆகிய இருவரிடமும்  விசாரணை நடத்தினர். 

விசாரணையில், அவர்கள் பொதுமக்களிடமிருந்து ரேஷன் அரிசியை வாங்கி கர்நாடகா மாநிலம் மைசூர் டி‌.நரசிபுரா பகுதியில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு அதிக விலைக்கு விற்பதற்காக கடத்தி வந்தது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து, இருவரையும் காவதுறையினர் கைது செய்து, 23 மூட்டைகளில் சுமார் 1,150 கிலோ ரேஷன் அரிசி, ரேசன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனம் மற்றும் இருசக்கர வாகனம் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News