அந்தியூர் அருகே காசநோய் ஒழிப்பு, மழைக்கால நோய்கள் விழிப்புணர்வு முகாம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள காட்டுப்பாளையம் பகுதியில் காச நோய் ஒழிப்,பு புகையிலை எதிர்ப்பு மற்றும் மழைக்கால நோய்கள் விழிப்புணர்வு முகாம் நேற்று (17ம் தேதி) நடந்தது.

Update: 2024-10-18 01:15 GMT

காட்டுப்பாளையம் பகுதியில் 100 நாள் வேலை உறுதித் திட்ட பணியாளர்களுக்கான விழிப்புணர்வு முகாமில் எடுக்கப்பட்ட படம்.

அந்தியூர் அருகே உள்ள காட்டுப்பாளையம் பகுதியில் காச நோய் ஒழிப்பு புகையிலை எதிர்ப்பு மற்றும் மழைக்கால நோய்கள் விழிப்புணர்வு முகாம் நேற்று (17ம் தேதி) நடந்தது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டாரம் அத்தாணி அரசு ஆரம்ப சுகாதார நிலைய பகுதிக்கு உட்பட்ட பிரம்மதேசம் ஊராட்சியை சேர்ந்த காட்டுப்பாளையம் பகுதியில் ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் காசநோய் மருத்துவப் பணிகள் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலரின் வழிகாட்டுதலின் படி, 100 நாள் வேலை உறுதித் திட்ட பணியாளர்களுக்கு காசநோய் ஒழிப்பு, புகையிலை எதிர்ப்பு, டெங்கு மற்றும் மழைக்கால நோய்கள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. 


இந்த முகாமில் காசநோய் பரவும் விதம், நுரையீரல் காச நோயின் அறிகுறிகள் அதன் பாதிப்புகள், காச நோய்க்கான இலவச பரிசோதனை மற்றும் சிகிச்சை கிடைக்கும் இடங்கள், காச நோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டியவர்கள், புகையிலை பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள், புற்றுநோய் பாதிப்புகள், இளைய சமுதாயத்தினரின் சீரழிவுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

தொடர்ந்து, புகையிலை தடுப்புச் சட்டங்கள், புகையிலை பழக்க மீட்பு ஆலோசனை, டெங்கு காய்ச்சல் பரவும் விதம், கொசு உற்பத்தி தடுப்பு வழிமுறைகள், மழைக்கால நோய்கள் அதன் தடுப்பு முறைகள், பாதுகாப்பற்ற குடிநீரால் ஏற்படும் நோய்கள், பாதுகாப்பான குடிநீரின் அவசியம், காய்ச்சலுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியதின் அவசியம், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் நோக்கம் அதன் பயன்கள் குறித்து விளக்கமாக சுகாதார நலக்கல்வி வழங்கப்பட்டது.


இந்த முகாமில், ஈரோடு மாவட்ட துணை இயக்குநர் காசநோய் மருத்துவப் பணிகள் அலுவலக மாவட்ட நலக் கல்வியாளர் சிவகுமார், ஈரோடு மாவட்ட சுகாதார அலுவலக மாவட்ட புகையிலை தடுப்பு மைய சமூக சேவகர் சங்கீதா, சுகாதார ஆய்வாளர் ஆகாஷ், காசநோய் பிரிவு அலுவலர்கள் ராணி, சண்முகவடிவு மற்றும் 100 நாள் வேலை உறுதி திட்ட பணியாளர்கள் 105 பேர்கள் கலந்து கொண்டனர். அனைவராலும் புகையிலை எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

மேலும், முகாமில் கலந்து கொண்டவர்களில் காசநோய் அறிகுறி உள்ளவர்களுக்கு சளிப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Tags:    

Similar News