ஈரோடு காந்திநகரில் காசநோய் ஒழிப்பு, புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம்

ஈரோடு காந்திநகரில் காசநோய் ஒழிப்பு மற்றும் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

Update: 2024-07-19 00:37 GMT

ஈரோடு காந்திநகரில் நடைபெற்ற சுகாதார விழிப்புணர்வு முகாமில் துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட போது எடுத்த படம்.

ஈரோடு காந்திநகரில் காசநோய் ஒழிப்பு மற்றும் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம்  நடைபெற்றது.

ஈரோடு மாநகராட்சியில் பி.பெ.அக்ரஹாரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய பகுதிக்கு உட்பட்ட காந்தி நகரில் காசநோய் ஒழிப்பு, புகையிலை எதிர்ப்பு, டெங்கு தடுப்பு மற்றும் தீவிர வயிற்றுப்போக்கு நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.


இந்த முகாமில் காசநோய் பரவும் முறை அதன் அறிகுறிகள், நுரையீரல் காச நோயின் பாதிப்புகள், காச நோய்க்கான பரிசோதனை மற்றும் சிகிச்சை இலவசமாக கிடைக்கும் இடங்கள், புகையிலை பயன்பாடுகளினால் ஏற்படும் தீங்குகள் மற்றும் உடல் பாதிப்புகள், புற்றுநோய் பாதிப்புகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.


தொடர்ந்து, இளைய சமுதாயத்தினரின் சீரழிவுகள், புகையிலை தடுப்புச் சட்டங்கள், புகையிலை பழக்க மீட்பு ஆலோசனை, டெங்கு காய்ச்சல் பரவும் விதம், கொசு உற்பத்தி தடுப்பு வழிமுறைகள், தீவிர வயிற்றுப்போக்கு நோய் தடுப்பு முகாமின் நோக்கம், வயிற்றுப்போக்கு நோய்க்கான காரணிகள், பாதுகாப்பான குடிநீரின் அவசியம், ஓ ஆர் எஸ் கரைசல் தயாரிக்கும் முறை அதன் பயன்கள் குறித்து விளக்கமாக சுகாதார நலக் கல்வி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.


இதனையடுத்து, முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் சார்பாக மார்பக நுண் கதிர் பட பரிசோதனை, சளி பரிசோதனை, மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. மேலும் சுகாதார விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.


இம்முகாமில், ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் காசநோய் அலுவலக மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், மருத்துவ அலுவலர் கார்த்திபன், ஈரோடு மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் தமிழ்ப் பிரியன்,மாவட்ட புகையிலை தடுப்பு மைய சமூக சேவகர் சங்கீதா, சுகாதார ஆய்வாளர்கள் பாலமுருகன், வினோத்குமார், நடமாடும் எக்ஸ்ரே ஊர்தி குழுவினர்கள், காசநோய் ஒழிப்புத் திட்ட அலுவலர்கள், நகர்ப்புற சுகாதார செவிலியர்கள், மாநகராட்சி அலுவலர்கள், மக்களைத் தேடி மருத்துவம் திட்ட பெண் தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் 90 பேர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News