திம்பம் மலைப்பாதையில் தரை தட்டி நின்ற கண்டெய்னர் லாரியால் போக்குவரத்து பாதிப்பு

ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பாதையில் கண்டெய்னர் லாரி தரை தட்டி நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2023-12-15 05:00 GMT

சாலையில் தரை தட்டி நின்ற கண்டெய்னர் லாரி ‌‌.

சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையில் கண்டெய்னர் லாரி தரை தட்டி நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தமிழகம்- கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோவிலை அடுத்துள்ள அடர்ந்த வனப் பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப் பாதை உள்ளது.

இந்த மலைப் பாதை வழியாக இரண்டு மாநிலங்களுக்கிடையே வாகனப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநிலம் நோக்கி கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது, 14வது கொண்டை ஊசி வளைவில் இந்தப் லாரி திரும்பும்போது லாரியின் பின்புற அடிப்பகுதி தார் சாலையில் முட்டி நகர முடியாமல் நின்றது.

இதனால் அந்த வழியாக சிறிய வாகனங்கள் மட்டுமே சென்று வந்தன. பேருந்து, லாரி போன்ற வாகனங்கள் ஏதும் செல்ல முடியவில்லை. இதனால் வாகனங்கள் மலைப்பாதையில் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதைத்தொடர்ந்து, 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு லாரி மீட்கப்பட்டது. அதன் பின்னரே போக்குவரத்து நிலைமை சீரானது. 

கண்டெய்னர் லாரி தரை தட்டி நின்றதால் திம்பம் மலைப்பாதையில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News