ஈரோடு கொல்லம்பாளையம் அருகே தேர்தல் புறக்கணிப்பு பேனர் வைத்த மக்கள்

ஈரோடு கொல்லம்பாளையம் அருகே தேர்தல் புறக்கணிப்பு பேனர் வைத்த மக்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2024-04-15 12:30 GMT

தேர்தல் புறக்கணிப்பு பேனர் வைத்துள்ள பண்ணை நகர் பொதுமக்கள்.

ஈரோடு கொல்லம்பாளையம் அருகே தேர்தல் புறக்கணிப்பு பேனர் வைத்த மக்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழக முழுவதும் ஆங்காங்கே தங்களது பகுதியில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத பிரச்சனைகளை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு பேனர் வைத்து வருகின்றனர். அதன்படி ஈரோடு கொல்லம்பாளையம் பண்ணை நகர் பகுதியில் இன்று சாலையோரம் அந்த ஊர் பொதுமக்கள் சார்பாக தேர்தல் புறக்கணிப்பு பேனர் வைக்கப்பட்டு இருந்தது. சாலையோரம் சென்ற வாகன ஓட்டிகள் இந்த பேனரை ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.

அந்த பேனரில் பொதுமக்கள் கூறியிருப்பதாவது:- ஈரோடு கொல்லம்பாளையம் பண்ணை நகரில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகிறோம். இங்கு தனிநபர் ஒருவர் பொது வழி பாதையை ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதை கண்டித்து நாங்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் புகார் மனு அளித்தும் கிட்டத்தட்ட 6 மாதமாகியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இதை கண்டித்து வருகிற பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அந்த பேனரில் எழுதப்பட்டிருந்தது.

இந்த செய்தி காட்டு தீ போல் பரவியது. இதனை அடுத்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று பேனர் குறித்து பொதுமக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News