ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் கிளம்பிய அடுத்த புதிய சர்ச்சை

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிக்கு தூய்மை பணியாளர்கள் குளுக்கோஸ் பாட்டில் மாற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Update: 2024-07-02 02:15 GMT

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் தூய்மை பணியாளர்கள் செவிலியர் பணியில் ஈடுபட்டதாக சமூக வலைத்தளங்களில் வைரலான வீடியோ.

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிக்கு தூய்மை பணியாளர்கள் குளுக்கோஸ் பாட்டில் மாற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் ஆண்கள் உள்நோயாளிகள் பிரிவில் தூய்மை பணியாளர் ஒருவர் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது, அங்கு சிகிச்சை பெற்று வந்த ஒரு நோயாளிக்கு இறங்கிய குளுக்கோஸ் (டிரிப்) தீர்ந்துள்ளது.

இதனையடுத்து, தூய்மை பணியாளர் நோயாளியின் குளுக்கோஸ் பாட்டிலை அகற்றினார். அதேபோல், பெண் தூய்மை பணியாளர் ஒருவர் செவிலியராக நோயாளிக்கு சிகிச்சை அளித்தார். இதனை அங்கிருந்த ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமுக வலைதளங்களில் பதிவிட்ட நிலையில், இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் கூறியதாவது, அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்களை தவிர வேறுயாரும் நோயாளிகளுக்கு ஊசி செலுத்துவது, குளுக்கோஸ் மாற்றிவிடுவது கூடாது என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

ஆனாலும், தூய்மை பணியாளர் மாற்றி விடுவது போன்ற செயல் எவ்வாறு நடந்தது என்று தெரியவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட நாளில் பணியில் இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது என்றார்.

கடந்த மாதம் தூக்கு படுக்கை (ஸ்ட்ரெச்சர்) கிடைக்காததால், தாயை மகள் தூக்கி சென்ற வீடியோவாலும், மருத்துவமனைக்கு சம்பந்தமில்லாத நபர் கூலிக்காக சக்கர நாற்காலி (வீல்சேர்) தள்ளிய வீடியோவாலும் ஈரோடு அரசு மருத்துவமனை நிர்வாகத்தின் மீது சர்ச்சை வெடித்தது. இந்நிலையில் அடுத்த சர்ச்சை கிளம்பியுள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் மாதம் ஒரு பிரச்னை கிளம்பி வருகிறது. இதனால், மருத்துவமனையில் சிகிச்சை பெறவே அச்சமாக உள்ளது. இதுபோன்ற பிரச்னைகளுக்கு அவர்களை அந்த பணியில் ஈடுபட்டக் கூறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாறாக, ஒப்பந்த பணியாளர்கள் மீதே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனால், இதுபோன்ற பிரச்னை தொடர்ந்து நடைபெறுகிறது. எனவே, இதுதொடர்பாக, உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News