உடல் உறுப்பு தான விழிப்புணர்வை அரசு மரியாதை செலுத்தி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது..!

உடல் உறுப்புகள் தானம் குறித்த விழிப்புணர்வை தமிழக அரசு மரியாதை செலுத்தி சிறப்பாகவும், முனைப்போடும் செயல்படுத்தி வருவதாக ஈரோடு தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சை மருத்துவர் சரவணன் தெரிவித்துள்ளார்.

Update: 2024-05-25 20:15 GMT

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஈரோடு அபிராமி கிட்னி கேர் சென்டர் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சரவணன்.

உடல் உறுப்புகள் தானம் குறித்த விழிப்புணர்வை தமிழக அரசு மரியாதை செலுத்தி சிறப்பாகவும், முனைப்போடும் செயல்படுத்தி வருவதாக ஈரோடு தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சை மருத்துவர் சரவணன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே தம்பிரான்வலசு பகுதியைச் சேர்ந்தவர் பூபதி. இவர் கடந்த 19ம் தேதி அறச்சலூரில் நிகழ்ந்த இருசக்கர வாகன சாலை விபத்தில் படுகாயமடைந்தார். பின்னர், ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 20ம் தேதி மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து மருத்துவர்கள் குழுவினர் மூளைச்சாவு உறுதி செய்தனர்.


இதன் பின்னர் பூபதி குடும்பத்தினர் உயிரிழந்த பூபதியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு உடல் உறுப்புகள் சிகிச்சை ஆணையத்தின் உத்தரவின்படி இளைஞரின் உடலில் இருந்து இருதயம், கல்லீரல், சிறுநீரகம், கண்கள், நுரையீரல் ஆகியவை ஈரோடு அபிராமி கிட்னி கேர் சென்டர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டன.

அவ்வாறு எடுக்கப்பட்ட உடல் உறுப்புகள் பெங்களூரில் உள்ள நபருக்கு கல்லீரலும், அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபருக்கு சிறுநீரகமும், சென்னை சேர்ந்த நபருக்கு இருதயமும், மற்ற‌ உறுப்புகள் ஈரோட்டைச் சேர்ந்தவருக்கும் பொருத்தப்பட்டு  தற்போது 5 பேரும் நல்ல நிலையில் இருப்பதாக அறுவை சிகிச்சை செய்த ஈரோடு அபிராமி கிட்னி கேர் சென்டர் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சரவணன் தெரிவித்தார்.

இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அறுவை சிகிச்சை மருத்துவர் சரவணன், வெளிநாடுகளில் 90 சதவீதம் மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் குறைந்த சதவீதம் மட்டுமே மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்படுகிறது. இதற்காக தமிழக அரசு உடல் உறுப்புகள் தானம் வழங்குவோரின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தி சிறப்பாக விழிப்புணர்வு செய்து வருகிறது. 

மேலும், இந்தியாவில் உடல் உறுப்புகள் தானம் செய்வதில் தமிழகம் மற்ற மாநிலங்களை விட தமிழகம் முன்னேற்றம் அடைந்து வருவதாக நம்பிக்கை தெரிவித்தார். இதனால் பொதுமக்கள் மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வர வேண்டும் என கேட்டு கொண்டார். விரைவில் ஈரோடு மாவட்டத்தில் இறப்பின் மூலம் உடல் உறுப்புகளை தானம் செய்த குடும்பத்தினரை தொண்டு அமைப்புகள் மூலம் கெளரவப்படுத்த இருப்பதாக மருத்துவர் சரவணன் தெரிவித்தார். 

Tags:    

Similar News