பவானி அருகே ஆம்னி காரில் கடத்தப்பட்ட ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவர் கைது
ஈரோடு மாவட்டம் பவானி அருகே ஆம்னி காரில் ரேஷன் அரிசி கடத்தியவரை கைது செய்த போலீசார், 640 கிலோ ரேஷன் அரிசி மற்றும் ஆம்னி கார் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.
ஆம்னி காரில் ரேஷன் அரிசி கடத்திய பூபதியை படத்தில் காணலாம்.
பவானி அருகே ஆம்னி காரில் ரேஷன் அரிசி கடத்தியவரை கைது செய்த போலீசார், 640 கிலோ ரேஷன் அரிசி மற்றும் ஆம்னி கார் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.
குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல்துறை தலைவர் ஜோசி நிர்மல்குமார் உத்தரவுபடி, கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் சந்திரசேகரன், ஈரோடு சரக காவல் துணைக்கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் ஆகியோர் மேற்பார்வையில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க ஈரோடு மாவட்டத்தில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, ஈரோடு மாவட்டம் பவானி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பவானி, மூவேந்தர் நால்ரோடு பகுதியில் ரேஷன் அரிசியை கடத்தி செல்வதாக ஈரோடு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று காவல் உதவி ஆய்வாளர் மூர்த்தி உள்ளிட்ட போலீசார் மூவேந்தர் நகர் நால்ரோடு அருகில் வாகன தணிக்கை செய்த போது அந்த வழியாக வந்த ஆம்னி காரை வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது, 16 மூட்டைகளில் 640 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. விசாரணையில், ரேஷன் அரிசியை கடத்தி வந்த நபரான பவானி குருப்பநாயக்கன்பாளையம் ஊராட்சிக் கோட்டை, ஜூவாநகரைச் பூபதி (வயது 50) என்பதும், இவர் பொதுமக்களிடமிருந்து ரேஷன் அரிசியை வாங்கி வெப்படை மற்றும் கல்லாங்காட்டுவலசு பகுதியில் தங்கி வேலை செய்யும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்ய கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து, பூபதியை கைது செய்து, 16 மூட்டைகளில் சுமார் 640 கிலோ ரேசன் அரிசியும், ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய ஆம்னி கார் வாகனத்தையும் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர்.