ரூ.35 ஆயிரம் லஞ்சம்: சத்தியமங்கலம் நகர சார்பமைப்பு ஆய்வாளர் உள்பட இருவர் கைது

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சியில் கட்டிட அனுமதிக்கு ரூ.35 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நகர சார்பமைப்பு ஆய்வாளர் உள்பட இருவரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-05-29 22:30 GMT
சத்தியமங்கலம் நகர சார்பமைப்பு ஆய்வாளர் பெரியசாமி.

சத்தியமங்கலம் நகராட்சியில் கட்டிட அனுமதிக்கு ரூ.35 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நகர சார்பமைப்பு ஆய்வாளர் உள்பட இருவரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சி பகுதி ராஜீவ் நகரை சேர்ந்தவர் நாகராஜ் வயது 65). காவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது மகள் சுஜன்யா பெயரில் வீடு கட்டுவதற்கு நகராட்சியில் கட்டிட அனுமதி வேண்டி விண்ணப்பித்தார். நகர சார்பமைப்பு ஆய்வாளராக பெரியசாமி என்பவரை அணுகியுள்ளார்.

தொடர்ந்து, அவர் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே அனுமதி வழங்க முடியும் என காலதாமதம் செய்துள்ளார். ரூ.1 லட்சம் ரூபாய் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. பின்பு, பேரம் பேசி ரூ.35 ஆயிரம் ரூபாய் தருவதாக கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத நாகராஜ், ஈரோடு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார்  தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, அவர்கள் ரசாயனம் தடவிய ரூ.35 ஆயிரம் ரூபாயை லஞ்ச ஒழிப்புத் துறையினர் நாகராஜிடம் கொடுத்து அனுப்பினர். நாகராஜ், புரோக்கராக செயல்பட்ட சத்தியமங்கலத்தைச் சேர்ந்த தனியார் பொறியாளர் தினேஷ் என்பவருடன் நகராட்சி சார்பமைப்பு ஆய்வாளர் பெரியசாமியிடம் கொடுத்துள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் ரேகா தலைமையிலான அதிகாரிகள் பெரியசாமியை கையும் களவுமாக பிடித்தனர்.

பின்பு, அவரிடம் 7 மணி நேரமாக விசாரணை நடத்தினர்.தொடர்ந்து பெரியசாமியையும், உடந்தையாக இருந்த தினேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். நகராட்சியில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணையால் நகராட்சி அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் நகராட்சி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News