பாட புத்தகத்தில் களிமண் நன்மை சேர்க்க குலாலர் சங்க முப்பெரும் விழாவில் தீர்மானம்

பாடப் புத்தகத்தில் களிமண்ணால் ஏற்படும் நன்மைகளை குறித்து ஒரு பிரிவை சேர்க்க வேண்டும் என குலாலர் சங்க முப்பெரும் விழாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2024-09-30 14:15 GMT

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பெத்தாம்பாளையத்தில் குலாலர் சங்கத்தின் முப்பெரும் விழா நடைபெற்றது.

தமிழக அரசின் பாடப் புத்தகத்தில் களிமண்ணால் ஏற்படும் நன்மைகளை குறித்து ஒரு பிரிவை சேர்க்க வேண்டும் என ஈரோடு மாவட்ட  குலாலர் சங்க முப்பெரும் விழாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஈரோடு மாவட்ட குலாலர் சங்கத்தின் 35வது ஆண்டு மாணவ, மாணவிகள் கல்வி பரிசளிப்பு விழா, மண்பாண்ட கலைஞர்களுக்கு பாராட்டு விழா, சங்கத்தின் முன்னோடிகளுக்கு விருது வழங்கும் விழா என முப்பெரும் விழா பெருந்துறை பெத்தாம்பாளையம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

விழாவுக்கு அறக்கட்டளை தலைவர் எஸ்.பி.நடராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் எஸ்.கனகராஜ் வரவேற்றார். மாவட்ட செயலாளர் வி.ராஜ்குமார் நிதிநிலை அறிக்கை வாசித்தார். கூட்டத்தில் மாநிலத் தலைவர் டாக்டர்.சேமநாராயணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சமுதாய மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கியும், மூத்த கலைஞர்களை பாராட்டியும் பேசினார்.

விழாவில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மண்பாண்ட தொழிலாளருக்கு மூலதனமான களிமண்ணை அரசு குளங்களில் இலவசமாக எடுத்துக் கொள்ள ஆணையிட்டதற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேலும், தமிழக முதல்வர் மீண்டும் வாரியத் தலைவர் மற்றும் குழுவை அமைக்க வேண்டும். மண்பாண்ட தொழில் செய்யும் குலாலர் சமுதாயத்திற்கு நாடாளுமன்றம் சட்டமன்றம் உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்.

பாரத நாட்டை ஆண்ட பேரரசர் மாவீரர் சாலிவாகனன் திருவுருச் சிலையும், மணிமண்டபமும் அமைத்து தர தமிழக அரசை கேட்டுக் கொள்வது,  தைப்பொங்கலுக்கு இலவச அரிசி வேட்டி சேலை வழங்குவது போல் மண்பானையும் மண் அடுப்பும் வழங்க வேண்டும், மண்பாண்ட தொழிலை மேம்படுத்த மாவட்டத்தில் தொழில் பயிற்சி கல்லூரி அமைத்து தர வேண்டுவது, தமிழக அரசின் பாடப் புத்தகத்தில் களிமண்ணால் ஏற்படும் நன்மைகளை குறித்து ஒரு பிரிவை சேர்க்க வேண்டும்.

குலாலர் சமுதாயத்திற்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் பதிவு செய்த அனைத்து மண்பாண்டத் தொழிலாளர்களுக்கும் மின்சாரத்தால் இயங்கக்கூடிய மின்சக்கரம் இலவசமாகவும், இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் இதில் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தின் முடிவில் மாவட்ட பொருளாளர் வீட்டு யுவராஜ் நன்றி கூறினார்.

Tags:    

Similar News