ஈரோடு அருகே தனியார் பள்ளி, கல்லூரி பேருந்துகள் மோதல்: 30 பேர் காயம்

ஈரோடு அருகே தனியார் பள்ளிப் பேருந்தும், தனியார் கல்லூரிப் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் 30 மாணவர்கள் காயமடைந்தனர்.

Update: 2024-10-21 11:00 GMT

விபத்துக்குள்ளான தனியார் பள்ளி, கல்லூரி பேருந்துகள்.

ஈரோடு அருகே தனியார் பள்ளிப் பேருந்தும், தனியார் கல்லூரிப் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் 30 மாணவர்கள் காயமடைந்தனர்.

ஈரோடு அடுத்த மூலக்கரை பகுதியில் தனியார் கான்வென்ட் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் வழக்கம் போல பள்ளிக்கு செல்லும் மாணவர்களை அழைத்து கொண்டு தனியார் பள்ளி பேருந்து வெள்ளோடு அடுத்த கொம்மன்கோவில் பகுதியில் இருந்து பள்ளி வாகனம் சென்று கொண்டு இருந்தது.

அப்போது, பெருந்துறை துடுப்பதியை நோக்கி சென்ற தனியார் பொறியியல் கல்லூரியை பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தனியார் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். காயம் அடைந்த மாணவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலமாக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இச்சம்பவம் குறித்து வெள்ளோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் பள்ளி வாகனமும் தனியார் பொறியியல் கல்லூரி வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் விபத்தில் காயமடைந்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை அதிமுக பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தார்.

Tags:    

Similar News