ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களில் கம்பம் நடும் விழா

ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களில் கம்பம் நடும் விழா நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Update: 2024-03-24 05:25 GMT

கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றிய பக்தர்கள்.

ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களில் கம்பம் நடும் விழா நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

ஈரோட்டில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் வகையறா கோவில்களாக சின்னமாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் ஆண்டுக்கான குண்டம் மற்றும் தேர்த்திருவிழா கடந்த 19ம் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.


அதைத்தொடர்ந்து, நேற்று (23ம் தேதி) இரவு 3 கோவில்களிலும் கம்பங்கள் நடும் விழா நடந்தது. முன்னதாக இரவு 11.30 மணிக்கு பெரிய மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்,தீபாராதனை நடந்தது. இரவு 1 மணிக்கு, காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலில், மஞ்சள் பூசி, காப்பு கட்டி, பூஜை செய்யப்பட்டு தயாராக வைக்கப்பட்டிருந்த 3 கம்பங்களை கோவில்களின் பூசாரிகள், மேளதாளங்கள் முழங்க தோளில் ஊர்வலமாக சுமந்து வந்தனர்.

ஊர்வலம் பெரியார் வீதி, கச்சேரி வீதி, பன்னீர் செல்வம் பூங்கா வழியாக கோவிலை வந்தடைந்தது. பின்னர் முதல் கம்பம் பெரியமாரியம்மன் கோவிலிலும், 2வது கம்பம் சின்ன மாரியம்மன் கோவிலிலும், 3வது கம்பம் காரைவாய்க்கால் மாரியம்மன் கோவிலிலும் நடப்பட்டது. இந்த விழாவில் ஈரோடு மாநகர் மற்றும் சுற்றுபுற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News